Cilipidikaram-Padipurai

மதுரைக் காண்டம்

12. அழற்படு காதை

"மன்னவன் மாண்டதை அறியாமல், அவையோர் அசைவற்றிருத்தல்"





5




10
ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது;
காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன;
அரைசர் பெருமான், அடு போர்ச் செழியன்
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து, ஆங்கு,
இரு நில மடந்தைக்குச் செங்கோல் காட்ட,
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
அரைசுக்கட்டிலில் துஞ்சியது அறியாது;
ஆசான், பெருங்கணி, அறக்களத்து அந்தணர்,
காவிதி, மந்திரக்கணக்கர்-தம்மொடு,
கோயில் மாக்களும், குறுந் தொடி மகளிரும்,
ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப-

"மன்னவன் கோயிலில் தீயைக்கண்டு, காவலர் முதலியோர் நீங்குதல்"



15
காழோர், வாதுவர், கடுந் தேர் ஊருநர்,
வாய் வாள் மறவர், மயங்கினர் மலிந்து,
கோமகன் கோயில் கொற்ற வாயில்
தீ முகம் கண்டு, தாம் விடைகொள்ள-

"
பிராமண பூதம்"





20




25




30




35
நித்திலப் பைம் பூண் நிலாத் திகழ் அவிர் ஒளி,
தண் கதிர் மதியத்தன்ன மேனியன்;
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து,
வெண் நிறத் தாமரை, அறுகை, நந்தி, என்று
இன்னவை முடித்த நல் நிறச் சென்னியன்;
நுரை என விரிந்த நுண் பூங் கலிங்கம்
புலராது உடுத்த உடையினன்; மலரா
வட்டிகை, விளம்பொரி, வன்னிகை, சந்தனம்,
கொட்டமோடு அரைத்துக் கொண்ட மார்பினன்;
தேனும், பாலும், கட்டியும், பெட்பச்
சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன்;
தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும்,
ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று,
பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன்;
நன் பகல் வர அடி ஊன்றிய காலினன்;
விரி குடை, தண்டே, குண்டிகை, காட்டம்,
பிரியாத் தருப்பை, பிடித்த கையினன்;
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்;
முத் தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ,
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு,
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்-

"அரச பூதம் "





40




45




50




55




60
(வென்றி வெங் கதிர் புரையும் மேனியன்;
குன்றா மணி புனை பூணினன்; பூணொடு
முடிமுதல் கலன்கள் பூண்டனன்; முடியொடு
சண்பகம், கருவிளை, செங் கூதாளம்,
தண் கமழ் பூ நீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்,
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்;
அங்குலி கையெறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணம் கொண்ட மார்பினன்;
பொங்கு ஒளி அரத்தப் பூம் பட்டு உடையினன்;
முகிழ்த்த கைச்
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி,
ஏலும் நல் சுவை இயல்புளிக் கொணர்ந்து,
வெம்மையின் கொள்ளும் மடையினன்; செம்மையின்)
பவளச் செஞ் சுடர் திகழ் ஒளி மேனியன்;
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின்,
முரைசொடு வெண்குடை, கவரி, நெடுங் கொடி,
உரைசால் அங்குசம், வடி வேல், வடிகயிறு,
என இவை பிடித்த கையினன் ஆகி,
எண்-அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி,
மண்ணகம் கொண்டு, செங்கோல் ஓச்சி
கொடுந் தொழில் கடிந்து, கொற்றம் கொண்டு;
நடும் புகழ் வளர்த்து, நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும்-

வணிக பூதம்




65




70




75




80




85
செந் நிறப் பசும் பொன் புரையும் மேனியன்;
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர்
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன்;
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி,
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்;
(உரைசால் பொன் நிறம் கொண்ட உடையினன்;
வெட்சி, தாழை, கள் கமழ் ஆம்பல்,
சேடல், நெய்தல், பூளை, மருதம்,
கூட முடித்த சென்னியன்; நீடு ஒளிப்
பொன் என விரிந்த நல் நிறச் சாந்தம்
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன்:
கொள்ளும், பயறும், துவரையும், உழுந்தும்,
நள்ளியம் பலவும் நயந்து உடன் அளைஇ,
‘கொள்’ எனக் கொள்ளும் மடையினன்; புடைதரு
நெல் உடைக் களனே, புள் உடைக் கழனி,
வாணிகப் பீடிகை, நீள் நிழல் காஞ்சி,
பாணி கைக்கொண்டு, முற்பகல் பொழுதின்
உள் மகிழ்ந்து உண்ணுவோனே; அவனே
நாஞ்சில் அம் படையும், வாய்ந்து உறை துலா முன்
சூழ் ஒளித் தாலும், யாழும் ஏந்தி,
விளைந்து பதம் மிகுந்து, விருந்து பதம் தந்து,
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து,
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து, ஆங்கு,)
உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக்
கிழவன் என்போன் கிளர் ஒளிச் சென்னியின்
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்
விளங்கு ஒளிப் பூத வியன் பெரும் கடவுளும்-
வேளாண் பூதம்

90




95




100
(கருவிளை புரையும் மேனியன்; அரியொடு
வெள்ளி புனைந்த பூணினன்; தெள் ஒளிக்
காழகம் செறிந்த உடையினன்; காழ் அகில்
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன்; ஏந்திய
கோட்டினும், கொடியினும், நீரினும், நிலத்தினும்,
காட்டிய பூவின் கலந்த பித்தையன்;
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்தி,
செம்மையின் வரூஉம் சிறப்புப் பொருந்தி,)
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன்;
ஒண் நிறக் காழகம் சேர்ந்த உடையினன்;
ஆடற்கு அமைந்த அவற்றோடு பொருந்தி,
பாடற்கு அமைந்த பல துறை போகி,
கலி கெழு கூடல் பலி பெறு பூதத்
தலைவன் என்போன்-தானும்-தோன்றி,

"நால் வகை வருண பூதமும் நீங்குதல்"



105
கோமுறை பிழைத்த நாளில், இந் நகர்
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின்,
யாம் முறை போவது இயல்பு அன்றோ?’ என,
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன்
நால் பால் பூதமும் பால்பால் பெயர-

"மறவோர் சேரியில் எரி பரவுதல் "


110
கூல மறுகும், கொடித் தேர் வீதியும்,
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்,
[உரக் குரங்கு உயர்த்த ஒண் சிலை உரவோன்]
கா எரிஊட்டிய நாள் போல் கலங்க,
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது,
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட-



"நெருப்பினால் நேர்ந்த துன்பம்
மிருகங்களின் நிலை"
115 கறவையும் கன்றும், கனல் எரி சேரா,
அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன;
மற வெங் களிறும், மடப் பிடி நிரைகளும்,
விரை பரிக் குதிரையும், புறமதில் பெயர்ந்தன:

மடந்தையரின் நிலை


120




125
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
மைத் தடங் கண்ணார், மைந்தர்-தம்முடன்,
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை
நறுமலர் அவிழ்ந்த நாறு இரு முச்சித்
துறு மலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்,
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங் காழ் ஆரம், பரிந்தன பரந்த
தூ மென் சேக்கை, துனிப் பதம் பாராக்
காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்க:

"குழந்தைகளுடன் மகளிர் வெளியேறுதல் "



130
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர்
குதலைச் செவ் வாய்க் குறு நடைப் புதல்வரொடு
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி,
வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத:

"இல்லறம் வழுவாத மகளிர"




135

வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டாப்
பெரு மனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி,
‘இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து,
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ அன்று’ என,
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர்:

"நாடக மடந்தையர் "



140




145
எண்-நான்கு இரட்டி இருங் கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி,
தண்ணுமை, முழவம், தாழ்தரு தீம் குழல்,
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்ப் பாணியொடு,
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து, ஆங்கு,
‘எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
இந் நாட்டு இவ் ஊர் இறைவனை இழந்து,
தேரா மன்னனைச் சிலம்பின் வென்று, இவ்
ஊர் தீ ஊட்டிய ஒரு மகள்’ என்ன-

"நித்திய கருமம் நடைபெறாதொழிதல்"

150
அந்தி விழவும், ஆரண ஓதையும்,
செந் தீ வேட்டலும், தெய்வம் பரவலும்.
மனை விளக்குறுத்தலும், மாலை அயர்தலும்,
வழங்கு குரல் முரசமும், மடிந்த மா நகர்-

"கண்ணகியின் முன் மதுராபதி தெய்வம் தோன்றுதல்
"





155
காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனள்; உயிர்த்து,
மறுகிடை மறுகும், கவலையில் கவலும்,
இயங்கலும் இயங்கும், மயங்கலும் மயங்கும்,
ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன்,
கொந்து அழல் வெம்மைக் கூர் எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதி-என்.

"வெண்பா "


மாமகளும், நாமகளும், மா மயிடன் செற்று உகந்த
கோமகளும், தாம் படைத்த கொற்றத்தாள்; நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்-
மதுராபதி என்னும் மாது.