Cilipidikaram-Padipurai
புகார்க் காண்டம்

2. மனையறம் படுத்த காதை

"எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் பள்ளிக் கட்டிலின் மீது கோவலனும் கண்ணகியும் வீற்றிருத்தல் "





5




10
உரைசால் சிறப்பின், அரைசு விழை திருவின்,
பரதர் மலிந்த, பயம் கெழு, மா நகர்-
முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி,
அரும் பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட:
குலத்தில் குன்றாக் கொழுங் குடிச் செல்வர்,
அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர்
உத்தர - குருவின் ஒப்பத் தோன்றிய
கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக் கால் அமளிமிசை,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து, இருந்துழி -

"தென்றலைக் கண்டு மகிழ்ந்து, இருவரும் காதல் கைம்மிக, நிலா-முற்றம் போதல்"



15




20




25
கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,
அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை,
வயல் பூ வாசம் அளைஇ; அயல் பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டு,
கோதை மாதவி, சண்பகப் பொதும்பர்,
தாது தேர்ந்து உண்டு; மாதர் வாள் முகத்துப்
புரி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்று;
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து,
மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங் கண் நுழைந்து,
வண்டொடு புக்க மண வாய்த் தென்றல்
கண்டு, மகிழ்வு எய்தி, காதலின் சிறந்து,
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி,

"
இருவரும் இன்புற்றிருத்தல்"



30




35
சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,
தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:

"கண்ணகியின் நலத்தைக் கோவலன் பாராட்டுதல்
"
"அவயவங்களின் அருமையைப் புகழ்தல்"


40




45




50
‘குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க:
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் -
படை நினக்கு அளிக்க - அதன் இடை நினக்கு இடை என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?
 

"கண்ணகியின் சாயலையும் நடையையும் மொழியையும் புகழ்தல்"



55




60
மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்
சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம், நல் - நுதல்! மெல் நடைக்கு அழிந்து,
நல் நீர்ப் பண்ணை நளி மலர்ச் செறியவும்;
அளிய - தாமே, சிறு பசுங் கிளியே -
குழலும், யாழும், அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மட நடை மாது! நின் மலர்க் கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின:

"கண்ணகியை அணிசெய்வித்தலும் வேண்டுமோ என்று கோவலன் கூறுதல்"





65




70
நறு மலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அணியே அன்றியும்,
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல் இருங் கூந்தல் சில் மலர் அன்றியும்,
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?
நான நல் அகில் நறும் புகை அன்றியும்,
மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?
திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?

"காதல் மொழிகள்"




75




80
மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை’-என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை - தன்னொடு தருக்கி,
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் -

"கோவலனும் கண்ணகியும் நடத்திய இல்லறம்"



85





90
வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி
மறப்பு - அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும்,
விருந்து புறந்தரூஉம் பெரும் தண் வாழ்க்கையும்,
வேறுபடு திருவின் வீறு பெறக் காண,
உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க,
யாண்டு சில கழிந்தன, இல் பெருங்கிழமையின் -
காண் தகு சிறப்பின் கண்ணகி - தனக்கு - என்.

"வெண்பா"


தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
காமர் மனைவி எனக் கைகலந்து, நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - மண்மேல்
நிலையாமை கண்டவர் போல், நின்று.