Cilipidikaram-Padipurai
புகார்க் காண்டம்

3. அரங்கேற்று காதை

"மாதவியின் நாட்டியப் பயிற்சி்"





5




10
தெய்வ மால் வரைத் திரு முனி அருள,
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்து, சாபம் நீங்கிய
மலைப்பு - அரும் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பில் குன்றாப் பெரும் தோள் மடந்தை
தாது அவிழ் புரி குழல் மாதவி - தன்னை,
ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல்,
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் - ஆறு ஆண்டில்
சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி -

"ஆடல் ஆசான்"





15




20



இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு,
ஆடலும், பாடலும், பாணியும்,தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும்காலை -
பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்,
கொண்ட வகை அறிந்து, கூத்து வரு காலை -
கூடை செய்த கை வாரத்துக் களைதலும்,
வாரம் செய்த கை கூடையில் களைதலும்,
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
25 ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னொடும் -

"
இசையோன்"





30




35
யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன் - தானும் -

"
முத்தமிழ்ப் புலவன்"




40


இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,
வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து,
இசையோன் வக்கிரித்திட்டத்தை உணர்ந்து, ஆங்கு,
அசையா மரபின் அது பட வைத்து,
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,
நாத் தொலைவு இல்லா நல் நூல் புலவனும் -

"தண்ணுமை ஆசிரியன்"


45




50



ஆடல், பாடல், இசையே, தமிழே,
பண்ணே, பாணி, தூக்கே,முடமே,
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,
கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு,
வார நிலத்தை வாங்குபு வாங்கி,
வாங்கிய வாரத்து, யாழும், குழலும்,
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,
கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,
சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்
55 அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் -

"குழலோன்"






60




65
சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,
ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி,
பண் அமை முழவின் கண் எறி அறிந்து,
தண்ணுமை முதல்வன் - தன்னொடும் பொருந்தி,
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து - ஆங்கு,
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து, வருவது ஒற்றி,
இன்புற இயக்கி, இசைபட வைத்து,
வார நிலத்தைக் கேடு இன்று வளர்த்து, ஆங்கு
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக,
வழு இன்று இசைக்கும் குழலோன் - தானும் -

"யாழ்ப் புலவன்"


70




75
ஈர்-ஏழ் தொடுத்த செம் முறைக் கேள்வியின்
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி,
வன்மையின் கிடந்த தார பாகமும்,
மென்மையின் கிடந்த குரலின் பாகமும்,
மெய்க் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள,
கைக்கிளை ஒழிந்த பாகமும், பொற்பு உடைத்
தளராத் தாரம் விளரிக்கு ஈத்து,
கிளைவழிப் பட்டனள்; ஆங்கே, கிளையும்
தன் கிளை அழிவு கண்டு அவள்வயின் சேர,
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர,
80




85
மேலது உழையுளி, கீழது கைக்கிளை
வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது:
இறுதி ஆதி ஆக, ஆங்கு அவை
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது,
படுமலை, செவ்வழி, பகர் அரும்பாலை என,
குரல் குரலாகத் தற்கிழமை திரிந்த பின்,




90
முன்னதன் வகையே முறைமையின் திரிந்து - ஆங்கு,
இளி முதலாகிய எதிர்படு கிழமையும்,
கோடி, விளரி, மேற்செம்பாலை என
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்,
இணை நரம்பு உடையன அணைவுறக் கொண்டு - ஆங்கு,
யாழ் மேற்பாலை இட முறை மெலிய,
குழல்மேல் கோடி வல முறை மெலிய,
வலிவும், மெலிவும், சமனும், எல்லாம்
பொலியக் கோத்த புலமையோனுடன் -

"நாட்டிய அரங்கின் அமைப்பு"


95




100




105




எண்ணிய நூலோர் இயல்பினின் வழா அது,
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடு வரைப் போகிய நெடுங் கழைக்
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு,
நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக,
எழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,
ஒரு கோல் உயரத்து,உறுப்பினது ஆகி,
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக,
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய,
தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த;
பூதரை எழுதி, மேல் நிலை வைத்து;
தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து; ஆங்கு,
ஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,
கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு;
ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி;
விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து -

"தலைக்கோல் அமைதி"



115




120




125
பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு,
கண் இடை நவ மணி ஒழுக்கி, மண்ணிய
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி,
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆக என
வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல்
புண்ணிய நல் நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர், மாலை அணிந்து,
நலம் தரு நாளால், பொலம் பூண் ஓடை
அரசு உவாத் தடக் கையில் பரசினர் கொண்டு,
முரசு எழுந்து இயம்ப, பல் இயம் ஆர்ப்ப,
அரைசொடு பட்ட ஐம் பெருங்குழுவும்
தேர் வலம் செய்து, கவி கைக் கொடுப்ப,
ஊர் வலம் செய்து புகுந்து, முன்வைத்து - ஆங்கு -

"மாதவியின் நாட்டியம்"
"மங்கலப் பாடல்"


130




135
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்,
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,
வலக் கால் முன் மிதித்து ஏறி, அரங்கத்து,
வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி,
இந் நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த
தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும்,
சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க,
வாரம் இரண்டும் வரிசையின் பாட,
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் -
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்.

"இசைக் கருவிகள் ஒலித்த முறை"


140
குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப்
பின் வழி நின்றது முழவே; முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.

"அந்தரக் கொட்டு"



145
ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி,
கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி,
வந்த முறையின் வழிமுறை வழாமல்,
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,

"தேசிக் கூத்து்"



150
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து,
பாற்பட நின்ற பாலைப்பண் மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து,
மூன்று அளந்து, ஒன்று கொட்டி, அதனை
ஐது மண்டிலத்தால் கூடை போக்கி,
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை,

"மார்க்கக் கூத்து"


155
ஆறும் நாலும் அம்முறை போக்கி,
கூறிய ஐந்தின் கொள்கை போல,
பின்னையும், அம்முறை பேரிய பின்றை,
பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்துக்
காட்டினள் ஆதலின்,

"மாதவி மன்னனிடம் பெற்ற பரிசு"
"காவல் வேந்தன்"
160
இலைப் பூங் கோதை, இயல்பினின் வழாமை,
தலைக்கோல் எய்தி, தலை அரங்கு ஏறி,
விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள் -

"மாதவியின் மாலையைப் பெற்று, கோவலன் அவளுடன் இருத்தல்"



165




170




175
‘அதுவே
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த,
வீறு உயர் பசும் பொன் பெறுவது; இம் மாலை,
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு’ என,
மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து,
நகர நம்பியர் திரிதரு மறுகில்,
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த -
மா மலர் நெடுங் கண் மாதவி மாலை
கோவலன் வாங்கி, கூனி - தன்னொடு
மணமனை புக்கு, மாதவி - தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி -
விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன் -
வடு நீங்கு சிறப்பின் தன் மனை, அகம் மறந்து - என்.

"வெண்பா"

எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்,
பண் நின்ற கூத்துப் பதினொன்றும், மண்ணின்மேல்
போக்கினாள் - பூம் புகார்ப் பொன் தொடி மாதவி, தன்
வாக்கினால் ஆடு அரங்கின் வந்து.