Cilipidikaram-Padipurai
புகார்க் காண்டம்

5. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

"சூரியன் உதித்தல்"




5
அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து,
ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல்,
கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதை இருள் - படாஅம் போக நீக்கி,
உதைய மால் வரை உச்சித் தோன்றி,
உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி -

"மருவூர்ப் பாக்கம்"





10




15




20




25




30




35
வேயா மாடமும்; வியன் கல இருக்கையும்;
மான் கண் காதலர் மாளிகை இடங்களும்;
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்;
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
கலந்து, இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும்;
வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
பூவும், புகையும், மேவிய விரையும்
பகர்வனர் திரிதரும் நகர வீதியும்;
பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்,
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும், துகிரும், ஆரமும், அகிலும்,
மாசு அறு முத்தும், மணியும், பொன்னும்,
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா
வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும்;
பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
காழியர், கூவியர், கள் நொடை ஆட்டியர்,
மீன் விலைப் பரதவர், வெள் உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர், பல் நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும்;
கஞ்சகாரரும், செம்பு செய்குநரும்,
மரம் கொல் தச்சரும், கருங் கைக் கொல்லரும்,
கண்ணுள் வினைஞரும், மண்ணீட்டு ஆளரும்,
பொன் செய் கொல்லரும், நன்கலம் தருநரும்,
துன்னகாரும், தோலின் துன்னரும்,
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி,
பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும்;
குழலினும் யாழினும், குரல் முதல் ஏழும்,
வழு இன்றி இசைத்து, வழித் திறம் காட்டும்
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரொடு
மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் -

"
பட்டினப் பாக்கம்"

40




45




50




55
கோ வியன் வீதியும்; கொடித் தேர் வீதியும்;
பீடிகைத் தெருவும்; பெருங்குடி வாணிகர்
மாட மறுகும்; மறையோர் இருக்கையும்;
வீழ்குடி, உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும், காலக் கணிதரும்,
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும்;
திரு மணி குயிற்றுநர், சிறந்த கொள்கையொடு
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும்;
சூதர், மாகதர், வேதாளிகரொடு
நாழிகைக் கணக்கர், நலம் பெறு கண்ணுளர்,
காவல் கணிகையர்,ஆடல் கூத்தியர்,
பூ விலை மடந்தையர், ஏவல் சிலதியர்,
பயில் தொழில் குயிலுவர், பல் முறைக் கருவியர்,
நகை-வேழம்பரொடு வகை தெரி இருக்கையும்;
கடும் பரி கடவுநர், களிற்றின் பாகர்,
நெடுந் தேர் ஊருநர், கடுங் கண் மறவர்,
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும்;
பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல் சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும் -

"
நாள்-அங்காடிப் பூதத்தை மறக் குடி மகளிர் வழிபடுதல்"


60




65




70




75
இரு பெரு வேந்தர் முனையிடம் போல
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய
கடை கால் யாத்த மிடை மரச் சோலை,
கொடுப்போர் ஓதையும், கொள்வோர் ஓதையும்,
நடுக்கு இன்றி நிலைஇய நாள்-அங்காடியில்-
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,
‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என,
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை-
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து;
துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி;
‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும்
பசியும், பிணியும், பகையும், நீங்கி;
வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி;
மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும்,
மூதில் பெண்டிர் ஓதையின் பெயர-

"பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப் பலி கொடுத்தல"





80




85
மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும்,
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும்,
முந்தச் சென்று, முழுப் பலி-பீடிகை,
“வெந் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க” எனப்
பலிக் கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக’ என -
கல் உமிழ் கவணினர், கழிப் பிணிக் கறைத் தோல்,
பல் வேல் பரப்பினர் மெய் உறத் தீண்டி,
ஆர்த்து, களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து,
சூர்த்து, கடை சிவந்த சுடு நோக்குக் கருந் தலை,
‘வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க’ என,
நல் பலி-பீடிகை நலம் கொள வைத்து, ஆங்கு,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து
மயிர்க் கண் முரசொடு வான் பலி ஊட்டி-

"மண்டபத்தில் பலிஇடல்"



90




95




100




105




110
இரு நிலமருங்கின் பொருநரைப் பெறாஅ,
செரு வெங் காதலின், திருமாவளவன்,
வாளும்,குடையும், மயிர்க் கண் முரசும்,
நாளொடு பெயர்த்து, ‘நண்ணார்ப் பெறுக-இம்
மண்ணக மருங்கின், என் வலி கெழு தோள்’என,
புண்ணிய திசைமுகம் போகிய அந் நாள்-
‘அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய,
பகை விலக்கியது இப் பயம் கெழு மலை’ என,
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை,
கொடுவரி ஒற்றி, கொள்கையின் பெயர்வோற்கு,
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்,
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்,
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்,
நுண்வினைக் கம்மியர் காணா மரபின;
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின: இவை-தாம்
ஒருங்குடன் புணர்ந்து, ஆங்கு, உயர்ந்தோர் ஏத்தும்
அரும் பெறல் மரபின் மண்டபம்- அன்றியும்,

"ஐவகை மன்றங்களில் அரும் பலி இடுதல்"






115




120




125



130




135




140
வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக்
கடைமுக வாயிலும், கருந் தாழ்க் காவலும்,
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி,
கட்போர் உளர் எனின், கடுப்பத் தலை ஏற்றி,
கொட்பின் அல்லது கொடுத்தலீயாது,
உள்ளுநர்ப் பனிக்கும் வெள் இடை மன்றமும்-
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி,
பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று,
வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்-
வஞ்சம் உண்டு மயல்-பகை உற்றோர்,
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர்,
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர்,
கழல் கண் கூளிக் கடு நவைப் பட்டோர்,
சுழல வந்து, தொழ,துயர் நீங்கும்,
நிழல் கால் நெடுங் கல் நின்ற மன்றமும்-
‘தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்,
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்,
அறைபோகு அமைச்சர், பிறர் மனை நயப்போர்,
பொய்க் கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர்’ என,
காதம் நான்கும் கடுங் குரல் எடுப்பி,
பூதம் புடைத்து உணும் பூத-சதுக்கமும்-
அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து,
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும்,
நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,
பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்-
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐ வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ-

"விழாவின் தொடக்கமும் முடிவும் முரசு அறைந்து
அறிவித்தல்"



வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால் வெண் களிற்று-அரசு வயங்கிய கோட்டத்து,
கால்கோள், விழவின், கடைநிலை, சாற்றி-

"கொடி ஏற்றம்"


145
தங்கிய கொள்கைத் தரு நிலைக் கோட்டத்து,
மங்கல நெடுங் கொடி வான் உற எடுத்து-

"வீதியின் மங்கலத் தோற்றம்"




150




155
மரகதமணியொடு வயிரம் குயிற்றி,
பவளத் திரள் கால், பைம் பொன் வேதிகை,
நெடு நிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்,
கிம்புரி, பகு வாய்க் கிளர் முத்து ஒழுக்கத்து,
மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய, தோம் அறு பசும் பொன்
பூரண கும்பத்து, பொலிந்த பாலிகை,
பாவை விளக்கு, பசும் பொன் படாகை,
தூ மயிர்க் கவரி, சுந்தரச் சுண்ணத்து,
மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு-
 

"இந்திரனை நீராட்டுதல்"




160




165
ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
அரச குமரரும், பரத குமரரும்;
கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்,
கவர் பரித் தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி;
அரைசு மேம்படீஇய, அகநிலை மருங்கில்,
‘உரைசால் மன்னன் கொற்றம் கொள்க’ என,
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட
தண் நறுங் காவிரி, தாது மலி பெரும் துறை,
புண்ணிய நல் நீர் பொன்குடத்து ஏந்தி,
மண்ணகம் மருள, வானகம் வியப்ப,
விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி-

"கோயில்களில் வேள்வி"


170




175
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
அறு முகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்,
வால் வளை மேனி வாலியோன் கோயிலும்,
நீல மேனி நெடியோன் கோயிலும்,
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்,
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்-
 

"கடவுளர் திருவிழா"

  நால் வகைத் தேவரும், மூ-அறு கணங்களும்,
பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால்-
 

"அறவுரை பகர்தல்"


180
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்,
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்,
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால்-

"சிறைவீடு செய்தல்"

கொடித் தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித் தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்-

"இசை முழக்கம்"


185
கண்ணுளாளர், கருவிக் குயிலுவர்,
பண் யாழ்ப் புலவர், பாடல் பாணரொடு,
எண்-அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால்-

"விழா மகிழ்ச்சி"

முழவுக் கண் துயிலாது, முடுக்கரும், வீதியும்,
விழவுக் களி சிறந்த வியலுள் ஆங்கண்-

"இளவேனிலும் மலயத் தென்றலும் உலவும் வீதி"


190




195




200


காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா
மாதர்க் கொடுங் குழை மாதவி-தன்னோடு
இல் வளர் முல்லை, மல்லிகை, மயிலை,
தாழிக் குவளை, சூழ் செங்கழுநீர்,
பயில் பூங் கோதைப் பிணையலின் பொலிந்து,
காமக் களி மகிழ்வு எய்தி, காமர்
பூம் பொதி நறு விரைப் பொழில் ஆட்டு அமர்ந்து,
நாள் மகிழ் இருக்கை நாள்-அங்காடியில்
பூ மலி கானத்துப் புது மணம் புக்கு,
புகையும் சாந்தும் புலராது சிறந்து,
நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து,
குரல் வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு,
திரிதரு மரபின் கோவலன் போல,
இளி வாய் வண்டினொடு, இன் இளவேனிலொடு,
மலய மாருதம் திரிதரு மறுகில்-

"வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்"


205




210




215




220




225
கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து-ஆங்கு,
இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி,
அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி,
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்!-
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின்
சீர் வாய் துவலைத் திரு நீர் மாந்தி,
மீன் ஏற்றுக் கொடியோன், மெய் பெற, வளர்த்த,
வான-வல்லி வருதலும் உண்டுகொல்!
‘இரு நில மன்னற்குப் பெரு வளம் காட்ட,
திருமகள் புகுந்தது இச் செழும் பதி ஆம்’ என,
எரி நிறத்து இலவமும், முல்லையும், அன்றியும்
கரு நெடுங் குவளையும், குமிழும், பூத்து, ஆங்கு
உள்வரிக் கோலத்து உறு துணை தேடி,
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்!-
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி,
பல் உயிர் பருகும் பகு வாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்து, தன் அரும் தொழில் திரியாது,
நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டி,
பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி,
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு!-என
உருவிலாளன் ஒரு பெரும் சேனை
இகல் அமர் ஆட்டி, எதிர் நின்று விலக்கி, அவர்
எழுது வரிக் கோலம் முழு மெயும் உறீஇ,
விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு-

"மனை புகுந்த ஆடவர் தம் மனைவியரின் ஊடலைத் தீர்க்க அறியாது நடுங்குதல்"



230
உடன் உறைவு மரீஇ, ஒழுக்கொடு புணர்ந்த,
வடமீன் கற்பின், மனை உறை மகளிர்;
‘மாதர் வாள் முகத்து, மணித் தோட்டுக் குவளைப்
போது புறங்கொடுத்துப் போகிய செங் கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின்,யாவதும்
மருந்தும் தரும் கொல்,இம் மா நில வரைப்பு?’ என
கையற்று நடுங்கும் நல் வினை நடு நாள்-

"கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்"

235




240
உள்ளக நறுந் தாது உறைப்ப, மீது அழிந்து,
கள் உக நடுங்கும் கழுநீர் போல;
கண்ணகி கருங் கணும், மாதவி செங் கணும்,
உள் நிறை கரந்து,அகத்து ஒளித்து, நீர் உகுத்தன;
எண்ணு முறை, இடத்தினும் வலத்தினும் துடித்தன-
விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து-என்.