‘மாயோன் பாணியும்,
வருணப் பூதர்
நால் வகைப் பாணியும், நலம் பெறு கொள்கை
வான் ஊர் மதியமும் பாடி, பின்னர்-
சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க-
பாரதி ஆடிய பாரதி-அரங்கத்து,
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட,
எரி முகப் பேர் அம்பு ஏவல் கேட்ப,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்;
தேர் முன் நின்ற திசைமுகன் காண,
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்;
கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன-வண்ணன் ஆடிய ஆடலுள்,
அல்லியத் தொகுதியும்; அவுணன் கடந்த
மல்லின் ஆடலும்; மாக் கடல் நடுவண்,
நீர்த் திரை அரங்கத்து, நிகர்த்து முன் நின்ற
சூர்த் திறம் கடந்தோன் ஆடிய துடியும்;
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த,
குடை வீழ்த்து, அவர் முன் ஆடிய குடையும்;
வாணன் பேர் ஊர் மறுகிடை நடந்து,
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்;
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்;
காய் சின அவுணர் கடுந் தொழில் பொறாஅள்,
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்:
செரு வெங் கோலம் அவுணர் நீங்க,
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்;
வயலுழை நின்று, வடக்கு வாயிலுள்,
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்-
அவரவர் அணியுடன்; அவரவர் கொள்கையின்;
நிலையும், படிதமும், நீங்கா மரபின்;
பதினோர் ஆடலும், பாட்டின் பகுதியும்,
விதி மாண் கொள்கையின் விளங்கக் காணாய்;
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்’ எனக்
காதலிக்கு உரைத்து, கண்டு, மகிழ்வு எய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன்-
உரு கெழு மூதூர் உவவுத்
தலைவந்தென,
பெரு நீர் போகும் இரியல் மாக்களொடு
மடல் அவிழ் கானல் கடல்-விளையாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினன் ஆகி-
பொய்கைத் தாமரைப் புள் வாய் புலம்ப,
வைகறை யாமம் வாரணம் காட்ட,
வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய;
வான வண் கையன் அத்திரி ஏற,
மான் அமர் நோக்கியும் வையமும் ஏறி-
கோடி பல அடுக்கிய கொழு நிதிக் குப்பை
மாடம் மலி மறுகின், பீடிகைத் தெருவின்,
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து, ஆங்கு
அலர், கொடி-அறுகும், நெல்லும், வீசி,
மங்கலத் தாசியர் தம் கலன் ஒலிப்ப,
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து;
மகர வாரி வளம் தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகி;
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து, விரி திரைப் பரப்பின்,
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்கு சென்று எய்தி-
வண்ணமும், சாந்தும்,
மலரும், சுண்ணமும்,
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்; 135
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்;
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்;
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்;
நொடை நவில் மகடூஉக் கடை கெழு விளக்கமும்;
இடை இடை, மீன் விலை பகர்வோர் விளக்கமும்;
இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை-விளக்கமும்;
விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும்;
மொழி பெயர் *தேஎத்தோர் ஒழியா விளக்கமும்;
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும்;
எண்ணு வரம்பு அறியா இயைந்து,ஒருங்கு ஈண்டி;
இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சி-அது ஆகி;
விரை மலர்த் தாமரை வீங்கு நீர்ப் பரப்பில்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல் அம் கானல்-
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி;
நிரை நிரை எடுத்த புரை
தீர் காட்சிய
மலைப் பல் தாரமும், கடல் பல் தாரமும்,
வளம் தலைமயங்கிய துளங்கு கல-இருக்கை-
அரசு இளங் குமரரும், உரிமைச் சுற்றமும்;
பரத குமரரும், பல் வேறு ஆயமும்;
ஆடு கள மகளிரும்; பாடு கள மகளிரும்;
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்-
விண் பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலை நாள் போல,
வேறு வேறு கோலத்து, வேறு வேறு கம்பலை,
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி-
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேர் யாற்று
இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப-
கடல் புலவு கடிந்த மடல்
பூந் தாழைச்
சிறை செய் வேலி அகவயின், ஆங்கு, ஓர்
புன்னை நீழல், புது மணல் பரப்பில்,
ஓவிய எழினி சூழ உடன் போக்கி,
விதானித்துப் படுத்த வெண் கால் அமளிமிசை,
வருந்துபு நின்ற வசந்தமாலை கை,
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி,
கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள்,
மா மலர் நெடுங் கண் மாதவி-தான்- என்.