Cilipidikaram-Padipurai
புகார்க் காண்டம்

6.கடல் ஆடு காதை

"விஞ்சை வீரன் காமக் கடவுளுக்கு விழா எடுத்தல"

வெள்ளி மால் வரை, வியன் பெரும் சேடி,
கள் அவிழ் பூம் பொழில் காமக் கடவுட்கு,
கருங் கயல் நெடுங் கண் காதலி-தன்னொடு
விருந் தாட்டு அயரும் ஓர் விஞ்சைவீரன்-
 

"இந்திர விழாவைப் பற்றியும், புகார்க் காட்சிகளைப் பற்றியும் விஞ்சை வீரன் தன் காதலிக்கு உரைத்தல்"

5




10




15




20




25
‘தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள்
இந்திர விழவு கொண்டு எடுக்கும் நாள் இது’ என-
‘கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி,
கொடுவரி ஊக்கத்துக் கோ-நகர் காத்த
தொடு கழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி,
நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம்
திருந்து வேல் அண்ணற்குத் தேவன் ஏவ
இருந்து, பலி உண்ணும் இடனும் காண்கும்;
அமராபதி காத்து, அமரனின் பெற்று,
தமரின் தந்து, தகைசால் சிறப்பின்
பொய் வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐ-வகை மன்றத்து அமைதியும் காண்குதும்;
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்,
தோரிய மடந்தை வாரம் பாடலும்,
ஆயிரம் கண்ணோன் செவிஅகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி,
மங்கலம் இழப்ப வீணை,’’மண்மிசைத்
தங்குக இவள்’’ எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய,
அங்கு, அரவு-அல்குல் ஆடலும் காண்குதும்;
துவர் இதழ்ச் செவ் வாய்த் துடி இடையோயே!
அமரர் தலைவனை வணங்குதும் யாம்’என-


30
சிமையத்து இமயமும், செழு நீர்க் கங்கையும்,
உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும்,
வேங்கட மலையும், தாங்கா விளையுள்
காவிரி நாடும், காட்டி; பின்னர்,
பூ விரி படப்பைப் புகார் மருங்கு எய்தி,
சொல்லிய முறைமையின் தொழுதனன் காட்டி;
மல்லல் மூதூர் மகிழ் விழாக் காண்போன்,

"மாதவி ஆடிய பதினோர் ஆடலைக் காதலிக்குக் காட்டி, விஞ்சை வீரன் மகிழ்தல"

35




40




45




50




55




60




65




70
‘மாயோன் பாணியும், வருணப் பூதர்
நால் வகைப் பாணியும், நலம் பெறு கொள்கை
வான் ஊர் மதியமும் பாடி, பின்னர்-
சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க-
பாரதி ஆடிய பாரதி-அரங்கத்து,
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட,
எரி முகப் பேர் அம்பு ஏவல் கேட்ப,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்;
தேர் முன் நின்ற திசைமுகன் காண,
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்;
கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன-வண்ணன் ஆடிய ஆடலுள்,
அல்லியத் தொகுதியும்; அவுணன் கடந்த
மல்லின் ஆடலும்; மாக் கடல் நடுவண்,
நீர்த் திரை அரங்கத்து, நிகர்த்து முன் நின்ற
சூர்த் திறம் கடந்தோன் ஆடிய துடியும்;
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த,
குடை வீழ்த்து, அவர் முன் ஆடிய குடையும்;
வாணன் பேர் ஊர் மறுகிடை நடந்து,
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்;
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்;
காய் சின அவுணர் கடுந் தொழில் பொறாஅள்,
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்:
செரு வெங் கோலம் அவுணர் நீங்க,
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்;
வயலுழை நின்று, வடக்கு வாயிலுள்,
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்-
அவரவர் அணியுடன்; அவரவர் கொள்கையின்;
நிலையும், படிதமும், நீங்கா மரபின்;
பதினோர் ஆடலும், பாட்டின் பகுதியும்,
விதி மாண் கொள்கையின் விளங்கக் காணாய்;
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்’ எனக்
காதலிக்கு உரைத்து, கண்டு, மகிழ்வு எய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன்-

"விழா முடிந்தபின் மாதவி கோலம் புனைந்து, கோவலனுடன் கூடியும் ஊடியும் இருத்தல்"




75




80




85
அந்தரத்துள்ளோர், அறியா மரபின்,
வந்து காண்குறூஉம் வானவன் விழவும்,
ஆடலும், கோலமும், அணியும், கடைக்கொள-
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப;
பத்துத் துவரினும், ஐந்து விரையினும்,
முப்பத்து-இரு வகை ஓமாலிகையினும்,
ஊறின நல் நீர், உரைத்த நெய் வாச,
நாறு இருங் கூந்தல் நலம் பெற ஆட்டி;
புகையின் புலர்த்திய பூ மென் கூந்தலை
வகைதொறும் மான்மதக் கொழுஞ் சேறு ஊட்டி;
அலத்தகம் ஊட்டிய அம் செஞ் சீறடி
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ;
பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை,
அரியகம், காலுக்கு அமைவுற அணிந்து;




90




95
குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து;
பிறங்கிய முத்தரை முப்பத்து-இரு காழ்
நிறம் கிளர் பூந் துகில் நீர்மையின் உடீஇ;
காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய
தூ மணித் தோள்வளை தோளுக்கு அணிந்து;
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கைவளை,
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை,
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து;
வாளைப் பகு வாய் வணக்கு உறு மோதிரம்,
கேழ் கிளர் செங் கேழ் கிளர் மணி மோதிரம்,
வாங்கு வில் வயிரத்து மரகதத் தாள்செறி,
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து;

100




105




110
சங்கிலி, நுண்-தொடர், பூண் ஞாண், புனைவினை,
அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து;
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு;
இந்திர-நீலத்து இடை இடை திரண்ட
சந்திர பாணித் தகை பெறு கடிப்பு இணை
அம் காது அகவயின் அழகுற அணிந்து;
தெய்வ உத்தியொடு, செழு நீர் வலம்புரி,
தொய்யகம், புல்லகம் தொடர்ந்த தலைக்கு-அணி,
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து;
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து,
பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்-

"கடற்கரைப் பயணம"





115




120




125




130
உரு கெழு மூதூர் உவவுத் தலைவந்தென,
பெரு நீர் போகும் இரியல் மாக்களொடு
மடல் அவிழ் கானல் கடல்-விளையாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினன் ஆகி-
பொய்கைத் தாமரைப் புள் வாய் புலம்ப,
வைகறை யாமம் வாரணம் காட்ட,
வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய;
வான வண் கையன் அத்திரி ஏற,
மான் அமர் நோக்கியும் வையமும் ஏறி-
கோடி பல அடுக்கிய கொழு நிதிக் குப்பை
மாடம் மலி மறுகின், பீடிகைத் தெருவின்,
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து, ஆங்கு
அலர், கொடி-அறுகும், நெல்லும், வீசி,
மங்கலத் தாசியர் தம் கலன் ஒலிப்ப,
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து;
மகர வாரி வளம் தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகி;
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து, விரி திரைப் பரப்பின்,
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்கு சென்று எய்தி-

"வைகறையில் கடற்கரைக் காட்சி"


135




140




145




150
வண்ணமும், சாந்தும், மலரும், சுண்ணமும்,
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்; 135
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்;
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்;
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்;
நொடை நவில் மகடூஉக் கடை கெழு விளக்கமும்;
இடை இடை, மீன் விலை பகர்வோர் விளக்கமும்;
இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை-விளக்கமும்;
விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும்;
மொழி பெயர் *தேஎத்தோர் ஒழியா விளக்கமும்;
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும்;
எண்ணு வரம்பு அறியா இயைந்து,ஒருங்கு ஈண்டி;
இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சி-அது ஆகி;
விரை மலர்த் தாமரை வீங்கு நீர்ப் பரப்பில்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல் அம் கானல்-
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி;

"நகர மக்கள் கடற்கரையில் களித்திருக்கும் காட்சி"




155




160




165
நிரை நிரை எடுத்த புரை தீர் காட்சிய
மலைப் பல் தாரமும், கடல் பல் தாரமும்,
வளம் தலைமயங்கிய துளங்கு கல-இருக்கை-
அரசு இளங் குமரரும், உரிமைச் சுற்றமும்;
பரத குமரரும், பல் வேறு ஆயமும்;
ஆடு கள மகளிரும்; பாடு கள மகளிரும்;
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்-
விண் பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலை நாள் போல,
வேறு வேறு கோலத்து, வேறு வேறு கம்பலை,
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி-
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேர் யாற்று
இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப-

"மாதவி கோவலனுடன் வீற்றிருத்தல"





170
கடல் புலவு கடிந்த மடல் பூந் தாழைச்
சிறை செய் வேலி அகவயின், ஆங்கு, ஓர்
புன்னை நீழல், புது மணல் பரப்பில்,
ஓவிய எழினி சூழ உடன் போக்கி,
விதானித்துப் படுத்த வெண் கால் அமளிமிசை,
வருந்துபு நின்ற வசந்தமாலை கை,
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி,
கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள்,
மா மலர் நெடுங் கண் மாதவி-தான்- என்.

"வெண்பா"

வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு
மாலைத் துயின்ற மணி வண்டு காலைக்
களி நறவம் தாது ஊத, தோன்றிற்றே-காமர்
தெளி நிற வெங் கதிரோன் தேர்.