12

     உரை எவ்வெவ்வாறு அமையவேண்டும் என்பது 16.5.1992 இல் நடந்த
அமைப்புக் கூட்டத்தில்முடிவு செய்யப்பெற்றது. அந்த வழி காட்டலை
மனங்கொண்டு உரையாசிரியர் ஒவ்வொருவரும் அவரவர்க்குஒதுக்கப்பட்ட
பகுதிகளிலிருந்து பப்பத்துப் பாடல்களுக்கு உரை எழுதி அனுப்புமாறு
கேட்டுக்கொள்ளப்பெற்றனர்.

     1992 ஜூன் மாதம் 27, 28 ஆகிய இரண்டு நாள்களில் உரையாசிரியர்கள்
இரண்டாம் முறையாகக்கூடினர். அவர்கள் எழுதிய உரைப் பகுதிகளைப்
பேராசிரியர் அ.ச.ஞா.  முதலிலேயே படித்து  வந்தார்; கூட்டத்தில்
ஒவ்வொருவர் உரையும் வரிவரியாகப் படித்துத் திறனாய்வு செய்தார். இந்தத்
திறனாய்வுவிவாதத்தினால் விளக்கவுரையின் அமைப்பு எவ்வாறு இருக்க
வேண்டும் என்பது தெளிவாயிற்று.

     அதன்பின்னர்  உரையாசிரியர்கள் பணியைத் தொடர்ந்து  செய்தனர்.
முடிவு நிலையில் மீண்டும் பேரா. அ.ச.ஞா. வரிவரியாகப் படிக்கக் கேட்டு,
வேண்டிய மாற்றங்கள் திருத்தங்கள்செய்தார்.

     செந்தமிழ் வித்தகர் - திறனாய்வு வேந்தர் - கம்பன் கலை நிலை
கண்டவராகிய அ.ச.ஞா.வின் நெறிகாட்டலிலும் பதிப்புப் பணியிலும் முடிவான
வடிவைப் பெற்றதே இந்தக் கம்பராமாயணவிளக்க உரை.

     உரையாசிரியர்களின் உரிமைக்கு ஊறு இல்லாமல் கவிச் சக்கரவர்த்தியின்
கருத்துவளம் புலப்படும் வகையில் பதிப்புப் பணியை மேற்கொண்டது
அ.ச.ஞா.வின் சிறப்பு.

முன்னோடிகள்

     கோவை, கம்பன் அறநிலை வெளியிடும் இந்தப் பதிப்புக்கு முன்னும்
பல உரைப் பதிப்புகள்வெளிவந்துள்ளன; மூலப் பதிப்புகளும் பல உண்டு.
முன்னோர் செய்த பணிகளை நன்றியுணர்வோடுபோற்றும் உரையாசிரியர்கள்,
தங்கள் தனித்தன்மை  கெடாமலும்  விளக்க உரையை வகுத்திருக்கிறார்கள்.
பல வகைகளிலும் இவ்  விளக்க உரைக்குத் தனிச் சிறப்புகள் உண்டு என்பது
உறுதி.  மேலோர்களின்காட்சிகளையும் கண்டு,  காலமும்  சூழலும்  தரும்
புதுக் காட்சி விளக்கங்களையும்  கொண்டது  இந்தப்பதிப்பு.

     யாப்பிலக்கண விதிப்படி சீர்கள் பிரிக்கப்பெறாமல், ஓரளவு தமிழ்ப்
பயிற்சி உடையவர்களும் எளிதில் மூலத்தைப் படித்துணருமாறு சொற் -
பொருள் தெளிவுக்கு ஏற்பச் சீர்கள் பிரிக்கப் பெற்