அங்கே தன்னுடைய எல்லையில் நின்று தான் உண்ணுகின்றதை இறைவனுக்குப் படைப்பதுபோல அவன்கையிலே கொண்டு வருகின்றான். "தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம்?" (1966) என்று பேசுகின்றான் குகன். ‘நான் கொண்டு வந்திருக்கிறேன். உன்னுடைய விருப்பம் எதுவோஅதன்படி செய்வாயாக’ என்று அந்த உரிமையை இராகவனுக்கே கொடுக்கிறான். ஏனையோர் அதனைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். இராகவனைப் பொறுத்த மட்டில் அதைமுழு அன்பின் வடிவாக வந்ததாக ஏற்றுக்கொள்கிறான். சர்க்கரையால் செய்யப்பட்ட மிளகாய் எப்படி உறைக்காமல் இனிக்குமோ அதுபோல "நீ கொண்டுவந்த இந்தத் தேனும் மீனும் அன்பு என்ற ஒன்றினாலே முற்றிலும் சமைக்கப்பட்டுவிட்டது." ஆகவே, "பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்" (1967) யாக குண்டத்தில் சொரியப்படுகின்ற அவிஸ் மிக உயர்ந்ததாகும் என்று இராகவன்பேசும்போது குகனுடைய அன்பை பரிபூரணமாக அறிந்து ஏற்றுக்கொண்டவனாகிறான். ஆகவே, இப்படி ஒருபாத்திரத்தை "தன்பரிசும் வினை இரண்டும் சாரும்மலம் மூன்றும்அற அன்புபிழம்பாய்த் திரிவார்" (பெ.ப. 803) என்று கண்ணப்பரைப்பற்றி சேக்கிழார் பின்னே 12 ஆம் நூற்றாண்டில் பாடுவார். அந்தப்பாடலுக்கு முழு இலக்கணமாக முன்னர் குகனை வகுத்துவிட்டான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். குகன் என்ற பாத்திரம் மறுபடியும் விடைகொடுத்த படலத்தில் தான் காணப்படுகிறது என்றாலும்,மறக்க முடியாத பாத்திரமாக தசரதனுடைய பிள்ளைகள் நால்வரும் வளர்ச்சி அடைந்து ஐவராக வளர்வதற்குமுதல் இடம் கொடுத்தவனாக அமைகின்றான். ஆகவே, குகனுடைய பாத்திரம் அயோத்தியா காண்டத்தில்அமைந்துள்ள அற்புதமான ஒரு படைப்பு ஆகும். கல்வி கேள்வி அரசியல் நுணுக்கங்கள் ஆகியவற்றை அறியாதவனாகிய குகன் பரதனுடைய சேனைவருகிறது என்று கேள்விப்பட்டவுடன் |