40

இருந்து வருகின்ற ஆவேசமான சொற்கள் அவனுடைய இயல்புக்கு
மாறுபட்டவை.  அதற்குரிய காரணம்வேறு எதுவும் இல்லை. தாய், தந்தை,
குரு, தெய்வம் ஆகிய அனைத்தும் இராமனே என்று நினைக்கின்றபரதனுக்கு
இராமன் கானம் போயினான் என்று கேள்விப்பட்டவுடன் எல்லையில்லாத
சினம் வருவது  நியாயமானதாகும்.அதுமட்டுமல்ல.

     ‘வரம் கொண்டு அவனைக் காட்டுக்குப் போக்கினேன்’ என்று கைகேயி
பேசுவதைக் கேட்டபோதுஅவனுடைய சினம் எல்லையில்லாமல் வளர்கிறது. 
ஆகவே,  இயல்பாக எல்லையற்ற பண்புடையவனாய் அடக்கத்தின்உறைவிடமாக இருக்கின்ற பரதன் இப்போது இவ்வளவு சினம்
கொள்ளும்போது நம்மையும் அறியாமல் ஒருகுறள் நினைவுக்கு வருகின்றது.

     "குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
     கணமேயும் காத்த லரிது"
                     (திருக்குறள் 29)

தன் எதிரே நின்று,  மனத்தில்  சிறிதும்  கலக்கம்  இல்லாமல்,  ‘நான் தான்
இராமனைக்காட்டுக்குப் போக்கினேன். தந்தை ‘வானத்தான் ஆனான்’ என்று
சொல்லுகின்ற ஒருத்தியைக்கொன்று விட வேண்டுமென்று பரதன்
நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அந்த நிலையில்கூடத் "தாய்என்னும்
பெயருக்காக உன்னைக் கொல்லாமல் விடவில்லை. என்னுடைய
முன்னவனாகிய இராகவன் முனியும்என்று அஞ்சின காரணத்தால்தான்
உன்னைக் கொல்லாமல் விடுகின்றேன்" என்று கூறுகிறான் - தன்சினம்
எல்லை மீறிப் போகாதபடி, எல்லை கடந்துபோய் ஊறு விளைக்காதபடி
அவன் இராமனிடத்தேகொண்டிருந்த அன்பு, பக்தி,  பண்பாடு குறுக்கே
நின்று காக்கின்றது.

     ஆகவே, பரதனை முதன்முதலாக நாம் பார்க்கின்றபோது அளவுகடந்த
சினத்தின் எல்லையிலே நிற்கின்றபாத்திரமாகத்தான் கம்பன் படைத்துக்
காட்டுகிறான்.

     தன் தாயாகிய கைகேயியைக் காணும்போது சினத்தின் எல்லையிலே
நிற்கின்ற பரதன், அடுத்துப்பெரிய தாயாராகிய கோசலையைப்
பார்க்கும்போது கோபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்துவிட,சோகத்தின்
எல்லைக்கே சென்று விடுகின்றான்.

     "கைகயர் கோமகள் இழைத்த கைதவம்,
     ஐய! நீ அறிந்திலை போலுமால்?"                    (2197)

என்று கோசலை பேசியது அவனுடைய மனத்தைப் புண்ணாக்கிவிட்டது.