வளர்ச்சி பெற்று வருபவனைப் பின்னே வரும் காண்டங்களில் காட்டாமல்     இறுதிவரையில் கம்பன்கொண்டு செலுத்துகிறான் என்றால் அது மிகமிகக்     கடினமான ஒன்றாகும்.    இந்த வளர்ச்சி - நந்திக்கிராமத்தில்சென்று,      ஆமைபோல் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொண்டு, சர்வபரித்தியாகம்     செய்து, இராகவன் ஆணையைச் சிரமேற் கொண்டு வாழ்கின்ற தீவிர     பக்தனாக விருப்பு,  வெறுப்பு அற்றவனாக, கடமையைச் செய்பவனாக     இருக்கின்ற பரதனாகப் பரிணமிக்குமாறு கம்பன் படைக்கின்றான்.      இக்கருத்துக்குஅரண்செய்கின்ற முறையில் பரதனைப்பற்றி விசுவாமித்திரன்     கூறும்,      "தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும்     பள்ளம்"                                       (கம்பன் 657) எனும் சொற்கள் அமைந்துள்ளன. அது முற்றிலும் பொருத்தமானது என்பதை     நாம் அறியமுடிகின்றது. அத்தகைய ஒரு சிறப்பை அயோத்தியா காண்டத்தில்     வைத்துக் காட்டிவிடுகின்றான் கவிச்சக்கரவர்த்திகம்பநாடன்.      இந்தப் பாத்திரங்கள் தவிர,  இலக்குவனையும் ஓரளவு உணர்ந்து      கொள்வதற்கு அயோத்தியாகாண்டம் பெரிதும் உதவுகின்றது.      பட்டம் இராமனுக்கு இல்லை என்றபோது,  இலக்குவன் சீறுகின்ற     சீற்றம்,  துடிக்கின்றதுடிப்பு,  எப்படியாவது பரதனையும்,  கைகேயியையும்     வென்று பட்டத்தை இராமனுக்கு வாங்கித் தருகிறேன்என்று அவன்     செய்கின்ற ஆர்ப்பாட்டம்,  அதன் எதிரே இராகவன் அவனைச்     சமாதானப்படுத்த முயல்வதுஎல்லாவற்றையும் அயோத்தியா காண்டத்தில்     காண்கிறோம்.      "நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே          பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்      மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த!      விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது?"(கம்பன் 1734)      ‘ஐய!  கைகேயி,  பரதன் இருவரும் எந்தவிதமான பிழையும்     செய்யவில்லை. விதியின்விளையாட்டு இது’ என்று இராகவன் சொல்கின்றான்.     அப்போதும்கூட இராகவனுக்கு எதிரே இலக்குவன்பேசுகின்றான்.              "விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி"      (1735)  |