96

     உருளுடைச் சகடம்  பூண்ட உடையவன் உய்த்த காரேறு
    அருளுடை  ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்
                                           (II.3 . 112 - 13)

என்று உயர்வு நவிற்சியின்றிக் கம்பன் படம்பிடித்துக் காட்டுகிறான்.  அரசனிட்ட  கட்டளையாகக்கைகேயி கூறியதைக் கேட்டதும்,

    மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோஎன்
    பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
    என்இனி உறுதி யப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்
    மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும்
                                      கொண்டேன்(II.3.114)

என்று கூறிய இராமன் மீட்டும்  அவளை வணங்கித் தன்தந்தையாகிய
தசரதன் இருந்த திசைநோக்கித் தொழுது கோசலையின் அரண்மனை
நோக்கிச் சென்றான். தன் தாயைக் கண்டு வணங்கியதும்,  ‘நெடுமுடி
புனைதற்கு உண்டோ இடையூறு’  என்று அவள் வினவ, ‘பங்கமில்குணத்து
எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றான்’  என்றான்.  பின்னர்
வனஞ்செல்லுமாறு  தான் பெற்றஆணையைக் கூறியதும் மிகவும் துயருற்று
வருந்திய  கோசலையைச்

    சிறந்த தம்பி திருவுற, எந்தையை
    மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை
    உறைந்து தீரும் உறுதிபெற்றேன் இதின்
    பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ

    விண்ணும் மண்ணும் இவ்வெலையும் மற்றும்வேறு
    எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்
    அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு
    ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல்              (II. 4.16-17)

என்று கூறித் தேற்றித் தெளிவிக்கிறான் கம்ப இராமன்.

அத்யாத்ம ராமாயணம்

     தசரதன் கட்டளைப்படி இராமனும் இலக்குவனும் சுமந்திரனுடன்
அரசனைக் காணவந்ததும்  தசரதன்இராமனைத் தழுவியவாறே  ‘இராமா’ 
எனக் கூறி மூர்ச்சையானார்.  அப்போது கைகேயி,  இராம, அரசன்
உன்னால்தான் இந்த நிலைக்கு ஆளானார். அவர் வாக்குப்படி நடப்பதானால்
அவர் மகிழ்ச்சிஅடைவார்,  என்று கூறினாள்.  அதைக் கேட்ட இராமன் 
"தந்தைக்காக நாடு,  தாய்,  தாரம்எதையும் தியாகம் செய்வேன். 
செய்யவேண்டியதைக் கட்டளை இடுங்கள்" என்று வேண்டினான்.  இதைக்
கேட்டுத் திருப்தி அடைந்த கைகேயி,  அரசனிடம் தான் பெற்ற