8. வேனிற் காதை

45




50

சண்பக மாதவி தமாலங் கருமுகை
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அஞ்செங் கழுநீர் ஆயிதழ்க் கத்திகை
எதிர்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியனிலம் ஆண்ட
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுக மன்றி உலகுதொழு திறைஞ்சுந்
திருமுகம் போக்குஞ் செவ்விய ளாகி
அலத்தகத் கொழுஞ்சேறு ஆளை இ அயலது
55 பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு

45
உரை
55

          (சண்பக மாதவி.........கைக்கொண்டு) விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட - மணம் பொருந்திய மலராகிய சிறிய வாளியாலே பெரிய நிலமுழுதையும் ஆண்ட, ஒரு தனிச் செங்கோல் ஒரு மகன் ஆணையின் - ஒப்பற்ற தனிச்செங்கோலையுடைய ஒருவனாகிய காமராசன் ஆணையாலே, ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் திருமுகம் - ஒரு திசை யன்றி உலகமெல்லாம் தொழுது வணங்கப்படும் அவன் றிரு முகத்தை, போக்கும் செவ்வியள் ஆகி - கோவலற்கு விடுப்பே மென்னும் நினைவாற் பிறந்த செவ்வியை யுடையளாகி, சண்பகம் மாதவி தமாலம் கருமுகை வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அம் செங்கழுநீர் ஆயிதழ் - சண்பகம் மாதவி பச்சிலை பித்திகை வெள்ளிப் பூவாகிய மல்லிகை என்னும் மலர்களாலும் வெட்டிவேராலும் அழகிய செங்கழுநீரின் நெருங்கிய மெல்லிய இதழ்களாலும் தொடுக்கப்பெற்ற, கத்திகை எதிர் பூஞ் செவ்வி - பூக்களின் மணம் மாறுபடும் செவ்வியையுடைய மாலையின், இடைநிலத்து யாத்த - நடுவிடத்தே தொடுத்த, முதிர்பூந்தாழை முடங்கல் வெண்தோட்டு - முதிர்ந்த தாழம் பூவினது முடக்கத்தையுடைய வெள்ளிய தோட்டிலே, அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக் கொண்டு - அதற்கு அய லிடத்தமைந்ததாகிய பித்திகையின் கொழுவிய முகையாகிய எழுத்தாணியைக் கையிற்கொண்டு, அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ - அதனைச் செம்பஞ்சின் குழம்பிற் றோய்த்து உதறி எழுதுகின்றவள்;

          செவ்வியளாகி வெண்டோட்டில் ஆணி கைக் கொண்டு அளைஇ எழுதுகின்றவள் என மாறிக் கூட்டுக. தமாலம் - பச்சிலை. கரு முகை - பித்திகை. வேர் - குறுவேர்; வெட்டிவேர். கத்திகை - மாலை. எதிர்தல் - மாறுபடுதல். நிலம் - இடம். ஒரு முகம் - ஒரு திசை; ஓரிடம். திருமுகம் - அரசர்கள் விடுக்குஞ் செய்தி வரைந்த ஏடு; மங்கல வழக்கு. அத் திருமுகங் கண்டுழி அதற்கஞ்சித் தணந்தார் கூடுதல் ஒருதலை யென்னுங் கருத்தால் அதனைக் காமராசனது திருமுக மென்றாளென்க.