10. நாடுகாண் காதை

 

மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டாங் கறிவனை யேத்தத்
தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்
கொன்றிய வுள்ள முடையே னாகலின்



56
உரை
63

       மற உரை நீத்த மாசறு கேள்வியர் - மற வுரைகளை நீக்கிய குற்றமற்ற கேள்விப் பயனை உடையவர்தம், அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த - அறவுரைகளைக் கேட்டு அக் கேட்டவாறே அருக தேவனை யேத்துதற்கு, தென்றமிழ் நன்னாட்டுத் தீது தீர் மதுரைக்கு - தெற்கின்கணுள்ள தமிழ் நாட்டின் கண்ணதாகிய குற்றந் தீர்ந்த மதுரைக்குச் செல்வதற்கு, ஒன்றிய உள்ள முடையேன் ஆகலின் - ஒருப்பட்ட உள்ள முடையேனாகலின், போதுவல் யானும் போதுமின் என்ற காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி - யான் செல்வேன் நீவிரும் வம்மின் என்று கூறிய கவுந்தி யடிகளைக் கையான் வணங்கி நாவாற் போற்றி, அடிகள் நீரே அருளுதிராயின் இத்தொடிவளைத் தோளி துயர் தீர்த்தேன் என - அடிகளே நீரே இன்னணம் அருள் செய்வீராயின் இவ் வளைந்த வளையை அணிந்த தோளினையுடையாளது துன்பமெல்லாம் போக்கினேனாவேனென்று சொல்ல ;

       மதுரைக்குச் செல்லவென ஒருசொல் விரித்துரைக்க. தொடி - வளைவு. 1 "தொடிக்கட் பூவை" என்பது காண்க. தீர்த்தேனென இறந்த காலத்தாற் கூறினான், கவுந்தியடிகளின் அருள் உண்டென்னும் தெளிவு பற்றி..

1. சீவக. 932.