10. நாடுகாண் காதை

120

உழாஅ நுண்தொளி உள்புக் கழுந்திய
கழாஅமயிர் யாக்கைச் செங்கட் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ் புற்ற
குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு
கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியக்



120
உரை
124

        உழாஅ நுண் தொளி உள் புக்கு அழுந்திய - உழப்படாத நுண்ணிய சேற்றுட் புக்கு ஆழ்ந்த, கழாஅ மயிர் யாக்கைச் செங்கட் காரான்-கழுவப் பெறாத மயிரினையுடைய உடலையும் சிவந்த கண்ணினையுமுடைய எருமை, சொரி புறம் உரிஞ்ச-தினவையுடைய முதுகினை உராய்தலானே, புரி ஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டின் - புரிகள் அறுந்து நெகிழ்தலையுற்ற அழியாத நெற்கூட்டின்கணுள்ள, கொழும் பல் உணவு - கொழுவிய பலவாகிய பண்டங்கள், கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரிய - கவரி போன்ற செந்நெல்லின் கதிரினிடத்துச் சிந்த ;

        தொளி - சேறு. உழாஅ நுண்டொளி - தானே பட்ட சேறு ; என்றது வயல் வளங் கருதிற்று. காரான் - எருமை. குமரி - அழியாமை. சோணாட்டின் விளைவு மிகுதி கூறியபடி.