10. நாடுகாண் காதை




பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழ லறவோன் றிருமொழி
அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும்
இந்திர விகார மேழுடன் போகிப்



11
உரை
14

       பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி - உயர்ந்த ஐந்து பரிய கிளையினையும் பசிய இலையினையுமுடைய மாபோதியின், அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி - எழில் விளங்கும் நிழலி லெழுந்தருளிய புத்த தேவன் அருளிச் செய்த ஆகமத்தை, அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் - விசும்பியங்குவோராகிய சாரணர் மறைய இருந்து ஓதி யாவர்க்கும் பொருள் விளங்கக் கூறப்படும், இந்திர விகாரம் ஏழ் உடன் போகி - இந்திரன் ஆக்கிய விகாரங்களேழினையும் முறையே கண்டு அவற்றைக் கழிந்து போய் ;

       போதி - போதத்தையுடையது ; அரசு. போதம் - ஞானம். அரசு என்னும் பெயரும் அதன் தலைமையை யுணர்த்தும். புத்தன் அரச மரத்தடியில் ஞானம் பெற்றதும், யான் தருக்களில் அரசாகின்றேன் எனக் கண்ணன் பகவற்கீதையிற் கூறியதும், பிறவும் இதன் பெருமைக்குச் சான்றாம். திருமொழி - ஆகமம் ; ஆகுபெயர். அறைந்தனர் சாற்றுதல் - மூலங் கூறிப் பொருளுரைத்தல். அறைந்தனர் - முற்றெச்சம். விகாரம் - நினைவினானாக்குதல்.