10. நாடுகாண் காதை




210

என்றவ னிசைமொழி யேத்தக் கேட்டதற்கு
ஒன்றிய மாதவ ருயர்மிசை யோங்கி

நிவந்தாங் கொருமுழம் நீணிலம் நீங்கிப்
பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து



208
உரை
213

       என்று அவன் இசை மொழி ஏத்தக் கேட்டு - என்று கூறி அவ் வருகதேவனது புகழ் மொழிகளைப் போற்றக் கேட்டு, அதற்கு ஒன்றிய மாதவர் - அக் கூற்றுக்கு உளம் ஒருப்பட்ட சாரணர், உயர்மிசை ஓங்கி நிவந்து ஆங்கு ஒரு முழம் நீணிலம் நீங்கி - சிலாவட்டத்தினின்றும் எழுந்து நிலத்தை விட்டு நீங்கி அந் நிலத்தினும் ஒரு முழம் உயர்ந்து நின்று, பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று - பிறப்பினைத் தரும் பாசம் கவுந்திக்குக் கெடுவதாகவென்று கூறி, அந்தரம் ஆறுஆப் படர்வோர்த் தொழுது - விசும்பின் வழியே செல்லும் அச் சாரணரைத் தொழுது, பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து - பாசம் ஒழிகவென்று வணங்கி வந்து ;

       கவுந்தி கெடுக என்றது கவுந்திக்குக் கெடுக என்றவாறு. படர்வோர், வினைப்பெயர், பணிந்தனர், முற்றெச்சம்.