1. காடுகாண் காதை





45




50
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்


41
உரை
51

       வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் - மிக்க அருவி நீரினையுடைய வேங்கட மெனப்படும், ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை - மிகவுயர்ந்த மலையின் உச்சி மீதே, விரிகதிர்
ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து - இருமருங்கினும் விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் திங்களும் விளங்கி உயர்ந்த இடைப்பட்ட நிலத்தே, மின்னுக்
கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு நல் நிற மேகம் நின்றது போல - நல்ல நீல நிறத்தினையுடைய மேகம் மின்னாகிய புது ஆடையை உடுத்து விளங்குகின்ற இந்திரவில்லாகிய பணியைப் பூண்டு நின்றாற்போல, பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும். - பகைவரை வருத்தும் சக்கரத்தினையும் பால்போலும் வெளிய சங்கத்தினையும், தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி- அழகிய தாமரை போன்ற கையினிடத்து ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு-அழகு விளங்கும் ஆரத்தை மார்பின்கண் பூண்டு, பொலம் பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய - பொன்னினானாய பூப்பொறித்த ஆடையொடு விளங்கித் தோன்றிய, செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - சிவந்த திருக் கண்களையுடைய நெடியோன் நின்ற கோலத்தினையும் ;

       
ஞாயிறும் திங்களும் சக்கரத்திற்கும் சங்கிற்கு முவமை அவற் றிடை நின்ற மேகம் ஆழிசங்கேந்திய நெடியோற்குவமை; மின்னும் வில்லும் பொலம்பூவாடைக்கும் ஆரத்திற்குமுவமை. மின், வில் ; ஆரம், பூவாடை - எதிர்நிரனிறை. மீமிசை - ஒரு பொருட் பன் மொழி . 1"பருவம் வாயத்தலி னிருவிசும் பணிந்த, இருவேறு மண்டிலத் திலக்கம் போல, நேமியும் வளையு மேந்திய கையாற், கருவி மின்னவி ரிலங்கும் பொலம்பூண், அருவி யுருவி னாரமொ டணிந்தநின், திருவரை யகலம்" என்னும் பரிபாடற் பகுதியோடு இஃது ஒத்து நோக்கி மகிழற்குரியது.


1. பரி. 13 ; 7--12.