1. காடுகாண் காதை

180




185




190
மேலோ ராயினும் நூலோ ராயினும்
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும்
தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோ ரெனக்காங் குரைப்பச்
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென


180
உரை
191

        மேலோர் ஆயினும் - இருந்தவமுடையோரும், நூலோர் ஆயினும் - கற்றறிந்தோரும், பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் - நன்மை தீமைகளின் கூறிபாடுணர்ந்தோரும், பிணி எனக்கொண்டு பிறக்கிட்டு ஒழியும் - உள்ளங்கவற்றும் நோய் என்று கருதி முகம் பாராது விட்டுவிலகுகின்ற,. கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என - வரைவின் மகளிருடைய வாழ்வு மிக இழிந்தது என்று சொல்லி, செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் - சிவந்த அரி படர்ந்த வளவிய கடையினையுடைய குளிர்ந்த கண்களால், வெண்முத்து உதிர்த்து - வெள்ளிய முத்துப் போலும் நீரைச் சிந்தி, வெண்ணிலாத் திகழும் தண்முத்து ஒருகாழ் தன் கையாற் பரிந்து - வெள்ளிய நிலாப்போல் விளங்கும் குளிர்ந்த தனி முத்து வடத்தினையும் பூட்டிய தனது கையினாலேயே அறுத்து வீசி, துனி உற்று என்னையும் துறந்தனள் ஆதலின் - வெகுண்டு என்னையும் துறந்தாள் ஆகையால், மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது - நீங்கள் மதுரை என்னும் பழம்பதியாகிய பெரிய நகரத்திற்கு வந்ததனை, எதிர்வழிப்பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப - வழிக்கண் எதிர்ப்பட்டோர் எனக்குக் கூறுதலான், சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் - வாணிகச் சாத்தொடு போந்து தனிமையால் துன்புற்று வருந்தினேன், பாத்தரும் பண்ப நின் பணி மொழி யாது என - பகுத்தல் அரிய பண்பினையுடையாய் அதற்கு நீ பணித்திடும் மாற்றம் யாதென்று கேட்ப ;

       
பால்வகை தெரிந்த பகுதியோர் - ஓதாது நன்மை தீமைகளை அறிவோர் என்றும், மதி நுட்பமுடையோர் என்றும் கூறுவர் பழைய உரையாளர்கள். பிறப்பு வீடு என்பவற்றின் துன்ப வின்பக் கூறு பாடுகளை யறிந்த மெய்யுணர்வினர் எனலுமாம். ஆயினும் என்பது விகற்பமுணர்த்தும். பிறக்கிடுதல் - பின்னிடல் ; அஃதாவது முகம் பாராமை. ஏகாரம், தேற்றம். போலும் என்பது போன்ம் என்றாயது. என்னையும் - துறவா என்னையும் ; உம்மை - சிறப்பு, சாத்து - வணிகர் கூட்டம். பாத்தல் - பகுத்தல் ; ஈண்டுப் பிரித்தல். இனி, பாத்தரும் பண்பு - பிறர்க்கில்லாத குணம் என்றுமாம்.