"உட்குடை............காட்டும் போலும்" உட்கு உடைச் சீறூர் ஒருமகன் ஆனிரை கொள்ள
உற்ற காலை - பகைவர்க்கு அச்சம் விளைத்தலையுடைய சீறூரிடத்துள்ள ஒப்பற்ற வீரன்
ஆனிரையைக் கொள்ளத் தொடங்கும்பொழுது, வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும்
வேண்டும் போலும் - நிரை கவரும் போர்ப் பூவாகிய வெட்சி மலர் மாலையைத் தான் சூட
வெள்ளிய வாளையுடைய கொற்றவையும் விரும்பும், வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும்
வேண்டின் - வெட்சி மாலையைச் சூடக் கொற்றவை விரும்பின், வேற்றூர்க் கட்சியுட்
காரி கடிய குரல் இசைத்துக் காட்டும் போலும் - பகைவர் ஊரைச் சூழ்ந்த காட்டிடத்துக்
கரிக் குருவி தனது கொடிய குரலால் அவர்க்கு வரும் கேட்டினைக் கூறி உணர்த்தும் ;
வெள்வாளுழத்தியும் வேண்டுமென்றது
அவள் உடன் செல்வ ளென்றபடி. இச் செய்யுளும் அடுத்த செய்யுளும் நிரைகவர்தற்கண் 'கொற்றவை
நிலை' கூறலின் வெட்சிப் புறனடை எனப்படும் ; என்னை? "1மறங்கடைக்
கூட்டிய துடிநிலை சிறந்த, கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே" என்றாராகலான். இனி,
வெண்பா மாலை இலக்கணம் நோக்கின் இவை வெட்சித்திணைக் கொற்றவை நிலையின்பாற்
படும் ; என்னை? "2ஆளி மணிக்கொடிப்
பைங்கிளிப் பாய்கலைக், கூளி மலிபடைக் கொற்றவை - மீளி, அரண்முருங்க ஆகோள் கருதின்
அடையார், முரண்முருங்கத் தான்முந் துறும்" என்றாராகலான்.
|