2. வேட்டுவ வரி



14

             வேறு

இளமா வெயிற்றி இவைகாண்நின் னையர்
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன ;



14
உரை
14

        "இளமாவெயிற்றி ..... நிறைந்தன" இளமா எயிற்றி - மாமை நிறத்தையுடைய இளமை பொருந்திய வேட்டுவ மகளே, இவை காண் நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் - இவற்றைக் காண்பாய் நினது தந்தை முதலியோர் முன்னாளில் வேட்டையிற் கவர்ந்த நல்ல பசுக் கூட்டங்கள் ; கொல்லன் துடியன் கொளைபுணர் சீர் வல்ல நல்லியாழ்ப் பாணர் தம் முன்றில் நிறைந்தன - வேல் வடித்துத் தரும் கொல்லனும் துடி கொட்டும் துடியனும் பாட்டுக்களைத் தாளத்துடன் புணர்க்கவல்ல நல்ல யாழினையுடைய பாணரும் எனப்பட்ட இவர்களுடைய முன்றிலின்கண் நிறைந்துள்ளன ;

        நின் ஐயர் தந்த நிரைகள் முன்றிலில் நிறைந்தன இவைகாண் என முடிக்க. இது, 11"படை இயங்கரவம்" என்னும் சூத்திரத்துக் 'கொடை' என்னுந் துறைப்பாற்படும்.


1. தொல், பொருள். புறத். 3.