4. ஊர்காண் காதை

35




40




45

பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்
உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும்
புரிகுழன் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்லது
ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை
பெண்டிரும் உண்டியும் இன்பமென் றுலகிற்
கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம்
கண்டன ராகிக் கடவுளர் வரைந்த
காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்
கேமஞ் சாரா இடும்பை எய்தினர்
இன்றே யல்லால் இறந்தோர் பலரால்
தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின



35
உரை
45

       பிரிதல் துன்பமும் - மகளிரைப் பிரிதலான் வரும் துன்பமும், புணர்தல் துன்பமும் - அவரைப் புணர்தல் காரணமாக உண்டாம் துன்பமும், உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்- இவ் விருகாலத்தும் காமன் ஒறுக்கும் துன்பமும், புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது - புரிந்த கூந்தலையுடைய பெண்டிரைப் புணர்ந்து மயங்கினார்க்கல்லது, ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை - ஒப்பற்ற தனித்த வாழ்க்கை யினையுடைய அறிஞரிடத்து இல்லை ; பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகிற் கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம் - இவ்வுலகத்து மகளிரும் உணவுமே இன்பம் தரத் தக்க பொருளாம் என்று கொண்ட அறிவிலார் அடையும் இடங்கொள்ளாத் துன்பத்தினை, கண்டனர் ஆகிக் கடவுளர் வரைந்த - உணர்ந்தனராய் முனிவர்கள் நீக்கிய, காமம் சார்பு ஆ - காமம் பற்றுக்கோடாக, காதலின் உழந்து - அன்பு கொண்டு வருந்தி, ஆங்கு ஏமஞ் சாரா இடும்பை எய்தினர் - கரை காணப்படாத துன்பத்தினை உற்றோர், இன்றே அல்லால் இறந்தோர் பலரால் - இந் நிகழ்காலத்துள்ளோ ரல்லாமலும் முற்காலத்துக் கழிந்தோரும் பலராவர், தொன்றுபட வரூஉம் தொன்மைத்து - இந் நிகழ்ச்சி அடிப்பற்றி வருகின்ற பழைமையினை உடைத்து ;

       புணர்தற் றுன்பத்தினும் பிரிதற் றுன்பம் பெரிது ஆகலான் பிரிதற் றுன்பம் முற்கூறப்பட்டது. உருவிலாளன் - அநங்கன். உர வோர் - முனிவர். 1"பெண்டிரு முண்டியு மின்றெனின் மாக்கட், குண்டோ ஞாலத் துறுபயன்" என வருதலான், பெண்டிரும் உண்டி யுமே இன்பமெனக்கொண்டாருமுளரென்பதறிக. இன்பம் தருவன வற்றை இன்பமென்றார். கொள்ளாத் துன்பம் - தம்மளவல்லாத துன்பமெனலுமாம்.

       இனி, அடியார்க்கு நல்லார், பெண்டிரும் உண்டியும் என்பவற்றை ஆகுபெயரான் இன்பமும் பொருளுமெனக்கொண்டு அதற்கேற்பப் பிரிதல் புணர்தல் என்பவற்றை இரண்டுக்கும் ஏற்றிப் பொருள் கூறிச் செல்வர் ; அவர் உருவிலாளன் என்பதற்குப் பொருளுக்கேற்ப 'வறுமை' என்றுரைப்பர். ஏமம் - காவல் ; கரை. ஆல், அசை.

1 மணி, 16 : 80-1.