5. அடைக்கலக் காதை

120 ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்

கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை
தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணின ளாகி


120
உரை
124

      ஆ காத்து ஓம்பி ஆப் பயன் அளிக்கும் - பசுக்களைப் பிணி முதலியவற்றினின்றும் காப்பாற்றிப் புல் நீர் முதலிய அளித்துப் பேணி அப் பசுவின் பயனை யாவர்க்கும் கொடுக்கின்ற, கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை - இடையர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிதும் தீமை இல்லை, தீது இலள் - ஆகலின் குற்றமில்லாதவள், முதுமகள் செவ்வியள் அளியள் - மேலும் இவள் முதியோளும் உட்கோட்டமில்லாதவளும் தண்ணளியுடையாளுமாவள், மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்று என எண்ணினள் ஆகி - ஆகலான் இம் மாதரி யிடத்துக் கண்ணகியை வைப்பதனால் குற்றம் ஒன்றும் இன்றாம் எனக் கருதியவளாய் ;

      
பிணி முதலிய உண்டாயவழி அவற்றை நீக்குதலைக் காத்து எனவும், புல் அருத்தல் முதலியவற்றை ஓம்பி எனவும் கூறினார். ஆப் பயன் - பால் முதலியன. அளியள் - அளிக்கத்தக்காள் எனலும் பொருந்தும் கொடும்பாடு - கொடுமை.