5. அடைக்கலக் காதை



50
ஒய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக்
கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்
பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி

மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களி றடக்கிய கருணை மறவ


48
உரை
53

      ஒய் எனத் தெழித்து ஆங்கு உயர்பிறப்பாளனை - அப்பொழுது விரைவில் உரப்பி அம் மறையோனை, கை அகத்து ஒழித்து - யானையின் கையினின்றும் விடுவித்து, கை அகம் புக் குப் பொய் பொரு முடங்கு கை வெண்கோட்டு அடங்கி - தான் அவ் வியானையின் புரை பொருந்திய கையினிடத்துப் புகுந்து போர் செய்யும் வளைதலையுடைய வெள்ளிய கோட்டின்கண் அடங்கி, மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து - கரிய பெரிய குன்றின்கண் இருந்த வித்தியாதரனைப் போல அதன் பிடரினிடத்திருந்து, பெருஞ்சினம் பிறழாக் கடக்களிறு அடக்கிய கருணை மறவ - மிக்க சினம் நீங்காத களிற்றின் மதத்தினை யடக்கிய அருள்வீரனே ;

      ஒய் - யானையைப் பாகர் வையும் ஆரிய மொழியுமாம். பொய்க் கையகம் எனவும் பொருவெண்கோடு எனவும் இயைக்க. இனி, பொய்பொரு முடங்குகை என்பதற்குப் புரை பொருந்திய வளைந்த கை என்பதும் பொருந்தும். பிறழ்தல் - நீங்குதல் ; 1"மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்து" என்றார் பிறரும். கடக் களிறு அடக்கிய - மதத்தையுடைய யானையை அடக்கிய எனலுமாம். மறையோற் கெய்தும் துயரினைப் பொறாமையானும், தன்னுயிர்க் கஞ்சாது பாய்ந்து அடக்குதலானும் கருணை மறவன் என்றான்.

1 சீவக. 983.