6. கொலைக்களக் காதை





145

கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
துன்னிய மந்திரத் துணையெனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக்

கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்
கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென்
சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென


142
உரை
147

           கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் - கன்னக்கோலும் கொடிற்றுக் கோலும் இன்றாகவும், துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு - தன் உள்ளத்துப் பொருந்திய மந்திரத்தினையே களவிற்குத் துணையாகக் கொண்டு, வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து - வாயில் காப்போரை மயக்கத் தினை உண்டுபண்ணும் உறக்கத்தின்கண் பொருந்துவித்து, கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் - கோயிற்கண் இருந்த சிலம்பினைக் கவர்ந்துகொண்ட கள்வன், கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்து - ஒலியினையுடைய பெரிய ஊர்க்குக் காவலரானோர் கண்களை மறைத்து, என் சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோன் என - என்னுடைய இழிந்த சிறிய குடிலின்கண் வந்திருக்கின்றான் என்று கூற ;

          கன்னகம் - அகழுங் கருவி. கவைக்கோல் - இட்டிகை முதலியவற்றைப் பறிக்குங் கருவி. மந்திரம் - துயிலுறுக்கும் மந்திரம். முன்னாள் கோயிற் சிலம்பு தன்னிடத்தில்லையென்று சாதித்தானாகலின், ஈண்டுக் 'கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்' என்றான். சில்லை - இழிவு.