6. கொலைக்களக் காதை





215


கல்லாக் களிமக னொருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப

மண்ணக மடந்தை வான்றுயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய விழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை யுருத்தென்.


212
உரை
217

          கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் - கல்வியின்மையாற் கொலையஞ்சானாய களிமகன் ஒருவன் தன் கையிலுள்ள வெள்ளிய வாளாலே வெட்டினான், விலங்கு ஊடு அறுத்தது - அவ் வெட்டானது குறுக்காகத் துணித்தது, புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப - துணிபட்ட புண்ணின் வழியே கொப்புளிக்கின்ற உதிரம் குதித்து எங்கும் பரக்க, மண்ணக மடந்தை வான் துயர் கூர - நில மடந்தை மிக்க துயரத்தினை அடைய, காவலன் செங்கோல் வளைஇய - அக் காவலனுடைய செங்கோல் வளையும் வண்ணம், வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென் - முன்னைத் தீவினை முதிர்தலான் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தனன் என்க.

         வெள்வாள் - பகைவரோடு பொருது குருதி படியாத வாள். மண்ணக மடந்தை துயர் கூர்ந்தது இவன் வெட்டுண்டமைக்கும் அதனாற் கண்ணகி துயருறுதற்கு மென்க. முன்னரும், 1"மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்" என்றார். இனி, மண்ணக மடந்தை - மதுரை யெனக் கொண்டு மேல் தனக்கு ஆவதுணர்ந்து துயர் கூர என்றுரைத்தலுமாம்.

        இது நிலைமண்டில வாசிரியப்பா.

1 சிலப், 16 : 40.