6. கொலைக்களக் காதை

35





40

தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின்
கடிமல ரங்கையிற் காதல னடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி

மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல
் தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுத முண்க அடிக ளீங்கென


35
உரை
43

         தாலப் புல்லின் வால்வெண் தோட்டு - பனையாகிய புல்லினது மிக வெள்ளிய ஓலையினால், கைவல் மகடூஉ கவின் பெறப் புனைந்த - கைத்தொழில் வல்ல மகள் அழகு பெறச் செய்த, செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின் - தொழிற் பாடமைந்த தவிசின்கண் கோவலன் அமர்ந்த பின்னர், கடி மலர் அங்கையிற் காதலன் அடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி - சுட்ட மண்கலங் கொண்டு காதலன் அடிகளைக் கழுவிய நீரை விளக்கமமைந்த மலர் போலும் அகங்கையால் வணங்கி மாற்றி, மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப் பனள்போல் - நிலமடந்தையினது மயக்கத்தை ஒழிப்பவள் போல, தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவி - தனது கையினால் குளிர்ந்த நீரைத் தெளித்து மெழுகி, குமரி வாழையின் குருத்து அகம் விரித்து ஈங்கு அமுதம் உண்க அடிகள் ஈங்கு என - ஈனாத வாழையின் குருத்தினை விரித்து அதன்கண் உணவினைப் படைத்து அடிகாள் இவ்விடத்து உண்டருள்க என்று சொல்ல ;

       பனை புறக்காழ்த்து ஆகலான் புல் எனப்பட்டது. தவிசு - தடுக்கு எனப்படும். அகம்+கை - அங்கை. அடிநீர் - அடியைக் கழுவியநீர். சுடுமண் மண்டை என்ற குறிப்பு இவள் முன்பெல்லாம் பொன், வெள்ளி முதலியவற்றானாய கலங்களை வழங்கினாள் என்பதுணர்த்தி நின்றது. தொழுதனள் - முற்றெச்சம். மண்ணக மடந்தைக்கு மயக்கம் இவர்க்கு மேல் வரும் தீங்கு நோக்கி உண்டாயது என்க. இனி மயக்கம் - அனந்தல் எனவுமாம். குமரி வாழை - ஈனாத தலை வாழை. ஈங்கு இரண்டனுள் ஒன்று அசை.

     ஆக்கி, இருந்தபின் மாற்றித் தெளித்துத் தடவி விரித்து அமுதம் உண்கவென என்க.