7. ஆய்ச்சியர் குரவை



1


2


3
              உரைப்பாட்டு மடை

குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு ;

உறிநறு வெண்ணெய் உருகா வுருகும்
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு ;

நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும்
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு ;


1
உரை
3

        உரைப்பாட்டு மடை - உரையாகிய பாட்டை இடையே மடுத்தது.

       "குடப்பால் உறையா................ஒன்றுண்டு" குடப்பால் உறையா - நாம் உறையிட்ட தாழிகளிற் பாலும் தோய்ந்தில, குவி இமில் ஏற்றின் மடக்கணீர் சோரும் - திரண்ட முரிப்பினை யுடைய ஆனேற்றின் அழகிய கண்களினின்றும் நீர் உகும் ; வருவது ஒன்று உண்டு - ஆதலான் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு ; உறைதல் - தோய்தல். குவிதல் - திரளுதல். மடம் - ஈண்டு அழகு. "உறிநறு வெண்ணெய்.........ஒன்றுண்டு" உறிநறு வெண்ணெய் உருகா - உறிக்கண் வைத்த முதல் நாளை வெண்ணெய் உருக வைத்தன உருகுகின்றில, உருகும் மறி தெறித்து ஆடா - ஆட்டுக் குட்டிகளும் துள்ளி விளையாடாமற் குழைந்து கிடக்கும்; வருவது ஒன்று உண்டு - ஆதலான் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு ;

       உருகுதல் - ஒன்று நெகிழ்தல், மற்றொன்று குழைந்துகிடத்தல். இனி. உருகும் என்ற பாடத்தினை உருகி எனக்கொண்டு உருகி ஆடா எனவும் முடிப்ப. உருகி - மெலிந்து.

"நான்முலை.........ஒன்றுண்டு" நான் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் - நான்கு முலைகளையுடைய பசு நிரை மெய் நடுங்கி நின்று அரற்றும், மான் மணி வீழும் - அப் பசுக்களின் கழத்திற்கட்டிய மணிகளும் அற்று நிலத்தில் விழும் ; வருவது ஒன்று உண்டு - ஆகலான் நமக்கு வரும் தீங்கு ஒன்று உண்டு ;

       ஆயம் - ஆனிரை. நடுங்குபு - நடுங்கி. மால் மணி - பெரிய மணி யென்றுமாம்.