7. ஆய்ச்சியர் குரவை

3
கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ ;


3
உரை
3

            "கொல்லையஞ்சாரல் ............ தோழீ" கொல்லையஞ் சாரல் குருந்து ஒசித்த மாயவன் - நம் கொல்லையைச் சார்ந்த விடத்து வஞ்சத்தால் வந்து நின்ற குருந்தமரத்தினை முறித்த மாயவன், எல்லை நம் ஆனுள் வருமேல் - நம் வழிபாட்டால் பகலே நம் ஆனிரையுள் வருவானாயின், அவன் வாயில் முல்லையந் திங்குழல் கேளாமோ தோழீ - அவன் வாயினால் ஊதுகின்ற இனிய முல்லைக் குழலோசையைத் தோழீ கேட்போம் ;

ஆம்பல், முல்லை என்பன பண்ணின் பெயராயினும், கொன்றையென ஒரு பண் இன்மையானும், இவை ஒரு பொருள் மேல் மூன்றடுக்கிய ஒத்தாழிசையாகலின் இரண்டு பண்ணும் ஒன்று கருவியுமாகக் கூறுதல் பொருந்தாமையானும் மூன்றையும் கருவி விசேட மாகக் கொள்ளுதல் வேண்டும். 1 "ஒழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர்" எனக் கலியுள்ளும், " கொன்றைப் பழக்குழற் கோவலராம்பலும்" என வளையாபதியுள்ளும் கொன்றைக் குழல் கூறப்படுதலின் கோவலர் கொன்றைப் பழத்தைத் துருவிக் குழல் செய்து ஊதுவரென்க. "கஞ்சத்தாற் குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்தலின் ஆம்பற் குழலாயிற்றெனவும், கொன்றைப் பழத்தைத் துருவித் துளைத்து ஊதலிற் கொன்றைக் குழலாயிற்றெனவும், முல்லைக் கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க் கட் செறிந்து ஊதுதலின் முல்லைக்குழலாயிற் றெனவும் கொள்க" என அடியார்க்குநல்லார் இவை காரணப்பெய ராதலை விளக்குவர்.

குழலின் இலக்கணம் மேல் அரங்கேற்று காதையில் குழலோன் அமைதி கூறியவிடத்து உரைக்கப்பட்டமை காண்க.

1 கலி. 106.