7. ஆய்ச்சியர் குரவை

4
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம
அறுவை யொளித்தான் அயர அயரும
நறுமென் சாயல் முகமென் கோயாம் ;


4
உரை
4

           . "இறுமென்சாயல் . . . . . என்கோயாம்" இறுமென்சாயல் நுடங்க நுடங்கி - கண்டார் மென்மையால் இற்றுவிடும் எனத் தக்க இடை துவளும் வண்ணம் அசைபவளது, அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் - புடவையை ஒளித்த மாயவனது வடிவின் அழகினையே யாம் புகழ்ந்து சொல்லுவேமோ, அறுவை ஒளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகம் என்கோ யாம் - அன்றி, அறுவையை ஒளித்தவன் அவள் துகிலின்மை கண்டு தளர்வுற அதனைக் கண்டு சோர்கின்ற நறிய மெல்லிய சாயலையுடையாளது காமக்குறிப்புடைய முகத்தினழகையே யாம் புகழக் கடவேமோ ;

          சாயல் - மென்மை; இறுமென்னும் என்றமையால் அஃது இடையைக் குறித்தது. நுடங்கி - பெயர். என்குமோ என்னும் பன்மை என்கோ எனத் திரிந்து வந்தது ; பன்மை யொருமை மயக்கம் எனினுமாம். வடிவு சிறந்ததென்பேமோ ? முகம் சிறந்த தென்பேமோ ? எதனைச் சிறந்ததென்று புகழ்ந்துரைப்பேம் என்றபடி. பின்வருவனவும் இன்ன.