10. வழக்குரை காதை




காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவம்--பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான கூடாயி னான்.

2
உரை
2

      காவி உகு நீரும் - கண்ணகியின் நீல மலர் போன்ற விழி பொழியும் நீரையும், கையில் தனிச் சிலம்பும் - அவள் கையில் உள்ள ஒற்றைச் சிலம்பினையும், ஆவி குடிபோன அவ் வடிவும் - உயிர் நீங்கினால் ஒத்த அவள் வடிவினையும், காடு எல்லாம் சூழ்ந்த கருங்குழலும் - காடுபோல் விரிந்து உடல் முழுதுஞ் சூழ்ந்த கரிய கூந்தலையும், கூடலான் கண்டு அஞ்சிக் கூடு ஆயினான் - கூடற்பதிக்கரசனாகிய பாண்டியன் கண்டு அஞ்சி வெற்றுடம்பாயினான், பாவியேன் - பாவியாகிய யான் இதனைக் காண்பேனாயினேன்.

      கூடாயினான் - உயிர்நீத்தான் என்றபடி, பாவியேன் என்ப தன் பின் ஒரு சொல் வருவித்து முடிக்க. இதுவும் வருஞ் செய்யுளும் கண்டாரொருவர் கூற்றாக அமைந்துள்ளன.