|
50
|
விட்டா ளெறிந்தாள்
விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்றோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப் |
|
வட்டித்த
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடை - அங்ஙனம் அவள் எறிந்த அளவிலே எழுதினாலொத்த
நீல நிறத்தினையும் புரிந்த செந்நிறமுடைய நீண்ட சடையினையும், பால் புரை வெள் எயிற்றுப்
பார்ப்பனக் கோலத்து - பாலை ஒத்த வெள்ளிய எயிற்றினையும் உடைய பார்ப்பன வடிவத்தோடு,
மாலை எரி அங்கி வானவன் தான் தோன்றி - ஒழுங்குபட்ட யாவற்றையும் எரித்தலையுடைய தீக்கடவுள்
வெளிப்பட்டு, மா பத்தினி நின்னை மாணப் பிழைத்த நாள் - சிறந்த கற்புடையாய் இந்
நகர் நினக்கு மிகவும் தவறிழைத்த அந் நாளே, பாய் எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர்
ஏவல் உடையேனால் - இந் நகரினைப் பரந்த எரிக்கு ஊட்டுவதற்கு முன்னரே யான் ஓர் ஏவல்
பெற்றுளேன், யார் பிழைப்பார் ஈங்கு என்ன - இவ்விடத்துப் பிழைத்தற்குரியோர் யாரென்று
கண்ணகியைக் கேட்க ; வட்டித்த - சூளுற்றதனால் வந்த என வுரைத்தலுமாம். மாண - மிக;
1"ஞாலத்தின் மாணப் பெரிது" என்புழி
மாணவென்பது அப் பொருட்டாதல் காண்க. மாண - திண்ணிதாக என்பர் அரும்பத வுரையாசிரியர்.
நிறத்தினையும் சடையினையும் எயிற்றினையும் கோலத்தினையும் உடைய வானவன் என்க. பாய்
எரி - பரந்த எரி. ஆல்: அசை. வானவன் தோன்றி என்ன என்க. |
1
குறள். 102.
|
|