12. அழற்படு காதை






65





70





75





80





85
அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்
செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்

வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்
[உரைசால் பொன்னிறங் கொண்ட இடையினன்
வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல்
சேட னெய்தல் பூளை மருதம்

கூட முடித்த சென்னியன் நீடொளிப்
பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம்
தன்னொடும் புனைந்த மின்னிற மார்பினன்
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும்
நள்ளியம் பலவும் நயந்துடன் அளைஇக்

கொள்ளெனக் கொள்ளு மடையினன் புடைதரு
நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி
வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப்
பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில்
உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே

நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ்
சூழொளித் தாலு மியாழு மேந்தி
விளைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து
மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து
விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு]

உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக்
கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர்
விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்


61
உரை
88

       செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் - சிவந்த நிறமுடைய ஒட்டற்ற பொன்னையொத்த மேனியையுடையோ னாய், மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசு முடி ஒழிய அமைந்த பூணினன் - நிலை பெற்ற சிறப்பினையும் மறம் பொருந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமை அமைந்த முடி தவிரப் பூண்ட கலன்களையுடையனாய், வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி - வாணிகஞ் செய்யு முறையானே பெரிய உலகினைக் காத்து, நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் - கலப் பையையும் துலாக்கோலையும் ஏந்திய கையினை யுடையனாய், உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக் கிழவன் என் போன் - உழவுத் தொழிலானே உலகினர்க்கு உதவும் குற்ற மற்ற வாழ்க்கைக்குரியோன் எனப்படுவோனாகிய, கிளர் ஒளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறைவன் வடிவின் ஓர் விளங்கு ஒளிப் பூத வியன் பெருங் கடவுளும் - விளங்கும் ஒளி யினையுடைய தலை மீது குழவித் திங்களை அணிந்த இறைவனது வடிவுபோலும் ஒளி மிளிரும் மிகப் பெரிய வணிகப் பூதமாகிய கடவுளும் ;

       முடியொழிந்தன வணிகர்க்குள வென்பது 1"வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுந், தாரு மாலையுந் தேரும் வாளும், மன்பெறு மரபி னேனோர்க்கு முரிய" என்பதனானும், அவர்க்கு உழவும் உரித்தென் பது 2"மெய்தெரி வகையி னெண்வகை யுணவின், செய்தியும் வரையா ரப்பா லான" என்பதனானும் பெறப்படும். மேனியனாய்ப் பூணின னாய்க் கையினனாய் வாழ்க்கைக் கிழவனென்போனாகிய பூதக் கடவுளும் என்க.

       "'செந்நிறப் பசும்பொன்' முதலாக 'வியன்பெருங் கடவுள்' ஈறாக வணிக பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை.

1 தொல், பொருளதி. 638.   2 தொல், பொருளதி 633.