-
13. கட்டுரை காதை



50
செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை


-
48
உரை
53

       செவிச் சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் - அச் சொல் காதினைச் சுடுவதாகிய ஆணியைப் போன்று புகைகின்ற தீ மூண்டு உள்ளத்தைச் சுடலானே, அஞ்சி நடுக்குற்று - அச்சமும் நடுக்கமு மடைந்து, வச்சிரத் தடக்கை அமரர் கோமான் - வச்சிரப் படை ஏந்திய பெரிய கையினையுடைய இந்திரனுடைய, உச்சிப் பொன்முடி ஒளி வளை உடைIத்த கை குறைத்த செங்கோல் - தலையிலுள்ள அழகிய முடியின்கண் ஒளி பொருந்திய வளையினை உடைத்த கையினைத் துணித்த செங்கோலினையும், குறையாக் கொற்றத்து - அதனாலாய குறைவுபடாத வெற்றியினையும் உடைய, இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை - அரசர் குடியிற் பிறந்த இப் பாண்டியர்களுக்கு வழுவுதல் இல்லையாகும் ;

       சுடுதலுள்ள இறைச்சி சூட்டிறைச்சியானாற் போலச் சுடுதலுடைய ஆணி சூட்டாணியாயிற்று. அமரர் கோமான் முடிவளை யுடைத்தமை 1"முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னி" என்பதனானும் அறியப்படும் ; வளை முடியின் ஓர் உறுப்பு ; வளையென்னும் படையால் முடியை உடைத்தானாகப் புராணங் கூறும். குறைத்த என்னும் பெயரெச்சம் செங்கோல் என்னும் ஏதுப்பெயர் கொண்டது. செங்கோல் வெற்றிக்குக் காரணமாதலை 2"வேலன்று வென்றி தருவது மன்னவன், கோலதூஉங் கோடா தெனின்" என்பதனானறிக. இழுக்க மின்மையாகிய இதுவும் கேட்டி என முடித்தலுமாம். பாண்டியன் கை குறைத்தமை, 3"எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித், தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை, நினைத்துத்தன் கைகுறைத்தான் றென்னவன் காணா, ரெனச்செய்யார் மாணா வினை," 4"நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித்தன், ஆடுமழைத் தடக்கை யறுத்து முறைசெய்த, பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்" எனபவற்றானும் அறியப்படும். கை குறைத்தவழிப் பொன்னாற் கை செய்து வைத்தமையின் 'பொற்கைப் பாண்டியன்' எனப் பெயரெய்தினன் போலும்!


1 சிலப். 11 : 26. 2 குறள். 546. 3 பழமொழி. 102. 4 தொல, கள ; 1. (இளம்)