1. குன்றக் குரவை





உரையினி மாதராய் உண்கண் சிவப்பப்
புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்
உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக்
குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி;     (6)



6
உரை
6

       உரை இனி மாதராய் உண்கண் சிவப்பப் புரை தீர் புனல் குடைந்து ஆடினோம் ஆயின் - மாதே இனியுரைப்பாயாக நாம் நம் மை உண்ட கண்கள் சிவக்கும் வண்ணம் குற்றம் தீர்ந்த நீரின்கண் மூழ்கி விளையாடினோம் ஆதலால், உரவு நீர் மா கொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்து ஒன்று பாடுகம் வா தோழி - கடலின்கண் மா மரத்தினை அழித்த வேலை ஏந்திய முருகனைப் போற்றி மண்டிலமிட்டுக் குரவைக் கூத்தாடி ஒரு பொருள் பற்றிப் பாடுவோம் தோழீ வருவாய் ;

      ஆயின் - ஆதலால் ; 1"ஊதுலை தோற்க வுயிர்க்குமென் னெஞ்சாயி, னேதிலார் சொன்ன தெவன்" என்றவிடத்து ஆயின் என்னும் சொல் இப் பொருளில் வருதல் காண்க. மாகொன்ற என்றது மாவாய் நின்ற சூரபதுமனைக் கொன்ற என்றவாறு. வேலேந்தி - வேலை யேந்தியவன் ; பெயர் ; ஏத்தியென்னும் பாடத்திற்கு வேலை ஏத்தியேத்தி என அடுக்காக்குக. தொடுத்தல் - வளைத்தல். ஒன்று என்றது மணங் கருதிற்று. தோழி வா பாடுகம் என்க.

1. சிலப். 18. 14-5.