1. குன்றக் குரவை





இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற் றன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன்வரு கென்றாள் ;   (10)



10
உரை
10

       இறைவளை நல்லாய் - கையிடத்தே வளையலை அணிந்த தோழீ, கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் - மிளகுக் கொடி வளரும் குளிர்ந்த மலையினையுடையான் எனக்குச் செய்த நோயினை, தீர்க்க அறியாள் மற்று அன்னை - அவற்கு மணஞ் செய்து கொடுத்தலானே போக்குதற்குத் தாய் அறியாளாய், அலர் கடம்பன் என்றே - இவளைக் கடப்பமலர் மாலையை அணிந்த முருகன் அணங்கினான் என்று கொண்டு, வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள் - அவற்கு வெறியாட்டயர் தலைக் கருதி வேலனை வருகவென்றழைத்தாள், இது நகையாகின்று - இச் செயல் என்னால் எள்ளி நகைத்தற் குரித்தாயிற்று ;

       இறை - முன்கை. கடம்பன் என்றே - கடம்பன் அணங்கினானென்றே என விரித்துரைக்க. வேலன் - படிமத்தான் ; வெறியாடுவோன். நல்லாய் அன்னை வேலன் வருகென்றாள் இது நகையாகின்றே எனக் கூட்டுக.