1. குன்றக் குரவை





கயிலைநன் மலையிறை மகனைநின் மதி நுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே ;   (15)



15
உரை
15

        கயிலை நன்மலை இறைமகனை - கயிலையாகிய நல்ல மலைக் கண் உளனாகிய இறைவன் புதல்வனே, அயல் மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே - ஏதிலாருடைய மணத்தினை விலக்கிடு எம் நலனுண்டு நல்காதாருடைய மணத்தினை ஈந்திடு என்றே, நின் மதிநுதல் மயில் இயல் மடவரல் மலையர்தம் மகளார் - நினக்குரிய மதி போன்ற நுதலினையும் மயில்போன்ற சாயலினையும் மடப்பத்தையும் உடைய குறவர் மகளாரின், செயலைய மலர் புரை திருவடி தொழுதேம் - அசோகின் மலரினை ஒத்த திருவடிகளை வணங்கினேம் ;

       மகனை என்பதன் கண் 'ஐ' இடைச்சொல். அயன் மணம் எனக்கொண்டு பிராசாபத்தியம் என்பர் அரும்பதவுரை யாசிரியர். மலையர் - மலைவாணர் ; குறவர் மகளார் - வள்ளி ; ஆர், உயர்வு குறித்தது. யாம் விரும்பியபடி நீ அருள் செய்தற்கு நின் முழு அன்பிற்கும் உரியவளும் எம் குலத்துதித்தவளுமாகிய வள்ளிப் பிராட்டியின் அடிகளை வணங்குதலே உபாயமெனக் கொண்டு வணங்கினோம் என்றாள் ; நின் அடிகளையும் மகளார் அடிகளையும் வணங்கினோம் என்றலுமாம். அவர் - தலைவர் ; இயற்பெயரின்றியே இங்ஙனம் சுட்டுப் பெயர் வருதல் புலனெறி வழக்கிடைப் பயின்றுள தென்க. .