1. குன்றக் குரவை

5




10

கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர்
அறுமுகம் இல்லை அணிமயில் இல்லை
குறமகள் இல்லை செறிதோ ளில்லை
கடம்பூண் தெய்வ மாக நேரார்
மடவர் மன்றவிச் சிறுகுடி யோரே ;
        (18)



5
உரை
10

        கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி மடந்தை பொருட்டால் வருவது இவ் வூர் - தலைவ நீ இவ்வூர்க்கண் கடப்ப மலர்மாலையைச் சூடி வேலினைக் கையிலேந்தி ஓர் மங்கையின்பொருட்டு வருதல் நின்னைக் கண்டார் முருகனென்று கருதல் வேண்டியே, அறுமுகம் இல்லை - ஆயின் நினக்கு ஆறுமுகங்கள் இல்லை, அணிமயில் இல்லை - அழகிய மயிலூர்தியும் இல்லை, குறமகள் இல்லை - மேலும் பக்கத்தே வள்ளி இல்லை, செறிதோள் இல்லை - பன்னிரு தோள்கள் இல்லை. ஆகலின், கடம்பூண் தெய்வமாக நேரார் மடவர் மன்ற இச் சிறுகுடியோரே - இச் சிறு குடியிலுள்ளார் நின்னை முறைமையை மேற்கொள்ளும் கடவுளாக உடன்படார் ஆதலால் அவர் மிக அறியார்;

      உடம்பிடி - வேல். கண்டார் முருகனென்று கருதல்வேண்டியே எனச் சில சொற்கள் வருவித்துரைக்க. இவ்வூர் என்று தலைவனைக் கூறினாளுமாம். அறுமுகம் முதலிய நான்கும் இல்லையென்று கூறித் தெய்வமாக நேரார் என்றுமாம். கடம் - கடன்; பலி. தெய்வமாக இகழ்தல்போல அலர் அறிவித்தவாறு.