1. குன்றக் குரவை

(22)




பாடுற்றுப்
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர்
பைத்தர வல்குல்தம் பைம்புனத் துள்ளாளே
பைத்தர வல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே



22
உரை
22

       பாடு உற்றுப் பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர் பைத்தர வல்குல் நம் பைம்புனத்து உள்ளாளே - பெருமை யுற்றுக் கற்புடை மகளிர் தாம் போற்றி வணங்கப் படுவாளாய ஒப்பற்ற அராப் படம் போன்ற அல்குலினையுடையாள் நமது பசிய புனத்திடத்துள்ளாள், பைத்தர வல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே - தேவர்கள் அவள் கணவனை அவளிடத்துக் கொண்டு வந்து தந்தும் அவளைக் புகழ்தல் ஒழியார்;

       கற்புடை மகளிர் கண்ணகியை வணங்குதலே தமக்குப் பெருமை யாகக் கோடலான் ''பாடுற்று.........தொழுவாள்'' என்றாள்; மேல் 'பாடுகம்' என்றமையால் அங்ஙனம் பாடுதலுற்று என்றுமாம். பைத்தரவு - அரவின் படம்; தூ, பகுதிப்பொருள் விகுதி. உரை - புகழ்; புகழ்தல்.