Untitled Document
2. காட்சிக் காதை





120
நூலறி புலவரை நோக்க ஆங்கவர்
ஒற்கா மரபிற் பொதியி லன்றியும்
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக்
கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும்
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்

தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப்


116
உரை
121

      ஆங்கவர் - அவ் வமைச்சர், ஒற்கா மரபின் பொதி யில் அன்றியும் - ஒடுங்காத முறைமையினையுடைய பொதியி லின்கண் அன்றியும், வில் தலைக்கொண்ட வியன் பேரிமயத்து - நமது வில்லைத் தன்னிடத்துடைய மிகப் பெரிய இமயவரைக் கண், கல் கால் கொள்ளினும் - கல்லினை அடிச்செய்து கொண்டா லும், கடவுள் ஆகும் - அது கடவுள் ஆம், கங்கைப் பேர் யாற்றி னும் காவிரிப் புனலினும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என - அங்ஙனம் கால் கொண்ட கல்லைக் கங்கையாற்றிடத்தும் காவிரியிடத்தும் நீர்ப்படை செய்தல் தகுதியுடைத்தாம் எனக் கூற;

      ஒற்கா மரபு - அழியாத தன்மை ; "பொதியி லாயினும் இமய மாயினும் ..... ஒடுக்கங் கூறார்" என்றமை காண்க. பொதியில் அன்றியும் - பொதியிற்கல் கொள்வதன்றியும். இமயக் கல்லிற்குக் கங்கையும் பொதியிற் கல்லிற்குக் காவிரியுங் கொள்க ; எதிர்நிர னிறை. நீர்ப்படை - நீரிற்படுத்துத் தூய்மை செய்தல். அவர் தக வுடைத்தெனக் கூறவென்க.