3,கால்கோள் காதை





120
கோல்வளை மாதே கோலங் கொள்ளாய்
காலங் காணாய் கடிதிடித் துரறிக்
காரோ வந்தது காதல ரேறிய
தேரோ வந்தது செய்வினை முடித்தெனக்
கா அர்க் குரவையொடு கருங்கயல் நெடுங்கட்

கோற்றொடி மாதரொடு குடகர் தோன்றத



116
உரை
121

       கோல்வளை மாதே கோலங்கொள்ளாய் - திரட்சி யுடைய வளையல்களை யணிந்த நங்கையே ஒப்பனைசெய்து கொள்வாயாக, காலம் காணாய் கடிது இடித்து உரறிக் காரோ வந்தது - காலத்தைக் காண்பாயாக, கடிதாக இடித்து உருமிக் கொண்டு கார்ப்பருவமோ வந்தது, காதலர் ஏறிய தேரோ வந்தது செய்வினை முடித்து என - நம் காதலர் ஏறிய தேரோ செய்வினை முடித்து மீண்டது என்று, கார்க்குரவையொடு - கார் காலத்தைக் குறித்துப் பாடும் குரவைப் பாட்டுடன், கருங்கயல் நெடுங்கண் கோற்றொடி மாதரொடு குடகர் தோன்ற - கரிய கயல்போன்ற பெரிய கண்களையும் திரண்ட வளைகளையுமுடைய மகளிருடன் குடகர்கள் தோன்ற ;

       'மாதே கோலங்கொள்ளாய் ; கார் வந்தது ; தேர் வந்தது' எனத் தோழி தலைமகட்குக் கூறும் பொருளமைந்த குரவைப் பாட்டென்க. காரோ தேரோ என்னும் ஓகாரங்கள் சிறப்பு. தேரோ வந்தது என விரைவுபற்றி இறந்த காலமாகக் கூறப்பட்டது. செய்வினை - போர். குடகர் - குடநாட்டுக் கூத்தர். குடகர் மாதரொடு கூடிக் குரவையொடு தோன்ற வென்க.