4. நீர்ப்படைக் காதை




105

மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன்

மணிமே கலையை வான்துயர் உறுக்குங்
கணிகையர் கோலங் காணா தொழிகெனக்
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்


103
உரை
108

        மற்றது கேட்டு மாதவி மடந்தை - அச்செய்தியினை மாதவி கேள்வியுற்று, நற்றாய் தனக்கு நல்திறம் படர்கேன் மணி மேகலையை வான்துய ருறுக்கும் கணிகையர் கோலம் காணாது ஒழிகென - யான் நன்மையாகிய பகுதியிற் செல்லக் கடவேன், நீ மணிமேகலையை மிக்க துன்பத்தினைச் செய்யும் கணிகையர் கோலத்தினளாகச் செய்யாதொழிகவென்று தன் தாயிடத்துச் சொல்லி, கோதைத் தாமம் குழலொடு களைந்து - கோதை யாகிய மாலையினைக் கூந்தலுடனே களைந்து, போதித்தானம் புரிந்து அறங்கொள்ளவும்-புண்ணியதானஞ் செய்து துறவறங் கொள்ளவும்;

        அது என்றது கோவலற்குற்றது முதலிய செய்தி, நற்றாய்-ஈன்ற தாய் ; சித்திராபதி, நற்றாய்தனக்குக் காணாதொழிகென்று கூறி யென்க. வான்றுய ருறுக்குங் கணிகையர் கோலம் என்றாள், அக் கோலத்தால் தான் துன்பமுறுதலான். கோதை - ஒழுங்கு எனலு மாம். போதித்தானம் - போதி மாதவர்முன் செய்யும் புண்ணிய தானம்.