4. நீர்ப்படைக் காதை





120

மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்

இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநா டழிக்கும் மாண்பின ராதலின்
ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய


117
உரை
123

        நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா-நினது மைத்துனனாகிய சோழன் பெருங் கிள்ளியுடன் சேராத, ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் - ஒத்த தன்மையினையுடை யராகிய ஒன்பது அரசர்கள், இளவரசு பொறார் - தாம் இள வரசாக இருத்தலைப் பொறாராய், ஏவல் கேளார் - அக் கிள்ளி யின் ஏவலைக் கேளாராய், வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் - செல்வமிக்க நாடாட்சியினைச் சிதைக்குந் தன்மையை உடையராயினா ராகலான், ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து - அவர்களுடைய ஒன்பது குடையினையும் ஒரே பகலில் ஒழித்து, அவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய் - அவ் வளவனது அழகிய ஆக்கினா சக்கரத்தை ஒருநிலைப் படச் செய்தோய் ;

        கிள்ளி - பெருங்கிள்ளி ; பெருநற் கிள்ளி யெனவும் கூறப்படு வன் ; இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி யென்பான் இவனே போலும். ஒன்பது மன்னரும் சோழர் குலத்தினரென்பது 1"ஆர் புனை தெரிய லொன்பது மன்னரை, நேரிவாயி னிலைச்செரு வென்று," 2 ஆராச் செருவிற் சோழர் குடிக் குரியோர், ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து, நிலைச்செருவினாற் றலையறுதது" என்பவற்றாற் பெறப்படும். ஒத்த பண்பினர் - ஒரு பெற்றியே பெருங் கிள்ளி யுடன் பகைமை பூண்டவர் ; தவற்றால் ஒத்த பண்பினையுடையர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இளவரசு - இளையனாயுள்ளான் அரசாளுதலை யென்றுமாம். மாண்பு - ஈண்டு இயல்பு.


1. சிலப். 28 : 116--7.
2. பதிற் 5. பதி.