4. நீர்ப்படைக் காதை



165





170


வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப

எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும்
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகுங் காலமு முண்டோ

தீதோ இல்லைச் செல்லற் காலையுங்
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கென்று
அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே


164
உரை
172

        வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப - ஒளி விளங்குகின்ற மாணிக்கக் கலன்பூண்ட வானவர் வியக்கும் வண்ணம், எயில் மூன்று எறிந்த இகல்வேற் கொற்றமும் - வானிலே தூங்கிய மூன்று மதிலினையும் அழித்த மாறுகொண்ட வேலின் வெற்றியும், குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர - குறுக நடக்கும் நடையினையுடைய புறாவினது மிக்க துயரம் ஒழியவும், எறிதருபருந்தின் இடும்பை நீங்க - அப் புறவினை எறியுமாறு துரந்த பருந்தின் பசித் துன்பம் ஒழியவும், அரிந்து உடம்பு இட்டோன் அறந்தரு கோலும் - தன் உடலினை அரிந்து அப் பருந்திற் களித்தவனது அறத்தினை வளர்க்கும் செங்கோலும், திரிந்து வேறு ஆகுங் காலமும் உண்டோ - பிறழ்ந்து மாறுபடுங் காலமும் உண்டாமோ ஆகாதன்றே ; தீதோ இல்லை செல்லற் காலையும் காவிரி புரக்கு நாடுகிழவோற்கு என்று-மழை யின்மையான் வற்கட மிக்க காலத்தினும் காவிரியாற் புரக்கப்படும் நாட்டிற்குரியோனாய சோழனுக்குச் சிறிது தீதும் இல்லை என, அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே - அரிய மறைகளை யுணர்ந்த மாடலன் கூறக்கேட்டு :

        எயில் மூன்றெறிந்ததனை 1"உயர்விசும்பிற், றூங்கெயின் மூன்றெறிந்த சோழன்காண்" என்பர் பின்னும். புறவின்றுயர் தீர்த்ததனைப் 2"புள்ளுறு புன்கண் தீர்த்தோன்" என்புழி உரைத்தமை யானுமறிக. தீரவும் நீங்கவும் அரிந்துடம்பிட்டோ னென்க. 3"வசை யில்புகழ் வயங்குவெண்மீன், றிசைதிரிந்து தெற்கேகினுந். தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினுந் தான் பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி" என்பவாகலின் செல்லற் காலையும் காவிரி புரப்பதாயிற்று.

-

1 சிலப், 29 ; "வீங்குநீர்" 2 சிலப். 20 ; 52.
3 பட்டினப். 1-6.