4. நீர்ப்படைக் காதை






255

ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி
வால்வளை செறிய வலம்புரி வலனெழ
மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து

குஞ்சர ஒழுகையிற் கோநக ரெதிர்கொள
வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென்.


251
உரை
256

        ஓர்த்து உடன்இருந்த கோப்பெருந்தேவி வால் வளைசெறிய - ஆகிய நால்நிலப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்டு உறங்காதிருந்த கோப்பெருந் தேவியின் வெள்ளிய வளையல்கள் செறிய, வலம்புரி வலன் எழ - வலம்புரிச் சங்கு வெற்றி தோன்ற முழங்க, மாலை வெண்குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து - வாகை சூடிய சென்னியையுடையனாய் வெந்திறலுடைய பட்டத்தியானையின் மேலிடத்தே மாலையணிந்த வெண்கொற்றக் குடையின்கீழ்ப் பொலிவுற்று, குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள-யானை நிரையுடன் திருநகர் எதிர்கொள்ள, வஞ்சியுட் புகுந்தனன் செங்குட்டுவன் - செங்குட்டுவன் வஞ்சி நகரிற் புகுந்தனன் என்க.

        செவிலியர் வாழ்த்தவும் கூனுங் குறளும் நாளணிபெறுகெனவும் பாணியும் பாணியும் பாணியும் பாணியும் ஓர்த்திருந்த கோப்பெருந்தேவி யென்க. ஓர்த்தல் - உற்றுணர்தல். வளைசெறிய என்றமையால் முன் நெகிழ்ந்தமை பெற்றாம். "குறிஞ்சி முதலாக நாலுநிலத்துப் பாணியும் ஓர்த்து உறங்காத தேவியென்றது நாலுநில அணிமையுங் கூறிற்று" என்பது அரும்பதவுரை. கோவலர் ஆன்பொருனைத் துறையில் ஆனினங்களைப் படிவித்தல் கூறுமிடத்தே மருதமும் நெய்தலுஞ் சார்ந்த முல்லை கூறப்படுதலானும், பின் கடலின் அடைகரையாகிய நெய்தலில் மகளிர் விளையாடுதல் கூறப்படுதலானும், கோப்பெருந்தேவி அவர்கள் பாடும் பாட்டினைக் கேட்டு உறங்காதிருந்த வஞ்சிநகரம் கடலின் புடையதென்பது தெற்றெனப் புலப்படும். ஒழுகை - ஈண்டு வரிசை. குஞ்சர வொழுகையுடன் புகுந்தனன் எனலுமாம்.

        வடதிசைக்கண் தும்பையையும் வாகையையும் முடித்துச் செங்குட்டுவன் தன் தேவி கைவளை செறிய வலம்புரி முழங்க வாகைச் சென்னியனாய் யானைமிசைப் பொலிந்து திருநகர் எதிர்கொள்ள வஞ்சியுட் புகுந்தனனெனக் கூட்டுக.

இது நிலைமண்டில வாசிரியப்பா

நீர்ப்படைக் காதை முற்றிற்று.