1. மங்கலவாழ்த்துப் பாடல்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்

1
உரை
3

       திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் - யாம் திங்களைப் போற்றுவேம்; திங்களைப் போற்றுவேம்; கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று - தாது பரந்த மாலையையுடைய சோழனது குளிர்ச்சியையுடைய வெண்குடை போன்று, இ - இந்த, அம் கண் உலகு - அழகிய இடத்தையுடைய உலகிற்கு, அளித்தலால் - பொதுவற அளி செய்தலால்.

       அடுக்கு, சிறப்பின்கண் வந்தது; மேல்வரும் மூன்றடுக்குகளும் அன்ன. இது

         1"விரவியும் வரூஉ மரபின வென்ப"

         என்பதனால், பண்பும் பயனும் விரவிவந்த உவமம், உலகை அளித்தலான் என விரித்தலுமாம். இது பாடாண்டிணைக்கண் 2 'நடைமிகுத் தேத்திய குடை நிழன் மரபு' என்னுந் துறையாகும். 'இத்தொடர் நிலைச் செய்யுட்குச் சிறந்த மங்கல மொழியாகலின் திங்களை முற்கூறினார்' என்பர் அடியார்க்கு நல்லார். மங்கல வாழ்த்து என்பதற்கு இரட்டுற மொழிதலால் நூன்முகத் துரைக்கப்படும் மங்கலமாகிய வாழ்த்து என்றலும் பொருந்தும். 3 "முந்நீர் நாப்பண்" என்னும் புறப்பாட்டில், 'உவவுமதி கண்டு விறலியும் யானும் வளவன் வெண்குடையை யொக்குமெனத் தொழுதனம்' எனபதன் கருத்து இதனுடன் ஒத்திருப்பது காண்க.


1 தொல். பொருள். சூ. 277. 3 புறம் 60.
2 தொல். பொருள். சூ. 61.