1. மங்கலவாழ்த்துப் பாடல்

30
.ஆங்கு,
பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்;


30
உரை
34

       ஆங்கு - அப் புகாரினிடத்து, பெருநிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த - நெடுநிலம் முழுவதையும் தனியே ஆளும் சோழ மன்னனை முதற் குடியாக வைத்து எண்ணுதலை யுடைய, ஒரு தனிக் குடிகளோடு - ஒப்பற்ற குடிகளாகிய தன் கிளையோடு கூடி, உயர்ந்து ஓங்கு செல்வத்தான் - மிக்கோங்கிய செல்வத்தை யுடையான், வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் - அறநெறியால் வந்த பொருளை வறியராய பிறர்க்கு உண்பிக்கும் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்; இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் - அவ்விருநிதிக் கிழவனுடைய மகன் பதினாறாண்டுக்கு உட்பட்ட பிராயத்தானாயினன்.

       பெருமகன் - கரிகால னென்பர் அடியார்க்குநல்லார்; அங்ஙனந் துணிதல் சாலாதென்பது பின்னர் விளக்கப்படும். ஒப்பின்மையின் மிகுதி கூறுவார் ஒரு தனிக் குடிகள் என்றார். உயர்ந்தோங்கு, ஒருபொரு ளிருசொல். வருநிதி - கலத்தினுங் காலினும் வருநிதி யென்றுமாம். பலர்க்கு என்னும் பாடத்திற்கு இல்லார் பலர்க்கும் என்றுரைக்க. ஆர்த்தும் - நிறைவிக்கும் என்றுமாம். மாசாத்துவான் - இயற்பெயர். இருநிதிக் கிழவன் - சிறப்புப்பெயர். மாசாத்துவான் குடிப்பெயர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இருநிதி - பெரிய நிதி; சங்கநிதி, பதுமநிதி யிரண்டும் என்றுமாம். தலைவன் பதினையாண்டும் பத்துத் திங்களும் புக்கவனும் தலைவி பதினோராண்டும் பத்துத்திங்களும் புக்கவளும் ஆகல் வேண்டும் என்பராகலின், அகவையான், அகவையாள் என்றார். இதனை,

       1 "களவினுள் தவிர்ச்சி வரைவின் ஈட்டம் திங்க ளிரண்டின் அகமென மொழிப"

என்னும் களவியற் சூத்திர உரையானறிக.


1இறை, அகப். சூ. 32.