6. வாழ்த்துக் காதை



14.

  

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;



14
உரை
14

''மலையரையன் . . . தொல்குலமே''

        மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக;

       
இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார். நிலவரசர் - கனகனும் விசயனும்.