6. வாழ்த்துக் காதை



20.

  கந்துக வரி

பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட
மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பஆர்ப்ப எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே
தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே;



20
உரை
20

''பொன்னிலங்கு . . . பந்தடித்துமே''

        பொன்இலங்கு பூங்கொடி-விளங்கும் பொற்பூங்கொடி போல் வாய், பொலம் செய்கோதை வில்லிட-பொன்னாற் செய்த மாலை ஒளிவிடவும், மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப - மின் போல் விளங்கும் மேகலைகள் ஒலிக்கவும், எங்கணும் தென்னன் வாழ்கவாழ்க என்று சென்று பந்து அடித்துமே - எவ்விடத்தும் பாண்டியன் வாழ்வானாகவென்று வாழ்த்திச் சென்று பந்தடிப்போம், தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே - தேவர்க்கரசன் வஞ்சத்தால் இட்ட ஆரமணிந்த மார்பினையுடைய பாண்டியன் வாழ்கவென்று வாழ்த்திப் பந்தடிப்போம்;

       
பொன்னிலங்கு பூங்கொடி, விளி. எங்கணுஞ் சென்று என்க. பந்து - தெறிக்கும் பந்து. தேவர் ஆரமிட்டதனை, 1''தேவர்கோன் பூணாரந் தென்னர் கோன் மார்பினவே'' என முன்னர்க் கூறியதனானும் அறிக. அடுக்குகள் பன்மையும் உவகையும் பற்றியன. அடித்தும், தன்மைப் பன்மை எதிர்கால முற்று. கந்துகம் - பந்து. இங்ஙனம் பாடிக்கொண்டு, பந்தாடுவரென்க.

 


1 சிலப். 17; ''கோவாமலை . . . என்பரால்''