6. வாழ்த்துக் காதை



21.

  

பின்னுமுன்னும் எங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துலாய்
மின்னுமின் னிளங்கொடி வியனிலத் திழிந்தெனத்
தென்னன்வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே
தேவரார மார்பன்வாழ்க வாழ்கஎன்றுபந் தடித்துமே;



21
உரை
21

''பின்னுமுன்னும் . . . பந்தடித்துமே''

        பின்னும்முன்னும் எங்கணும் பெயர்ந்து உவந்து எழுந்து உலாய் மின்னு மின்னிளங்கொடி வியன் நிலத்து இழிந்தென - மின்னுகின்ற கோமள மின்னற்கொடி பெரிய நிலத்து இறங்கிய தென்னப் பின்னிடத்தும் முன்னிடத்தும் மற்றெவ்விடத்தும் சென்று மகிழ்வு கொண்டு துள்ளி உலாவி, தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே - பாண்டியன் நீடு வாழ்வானாகவென்று வாழ்த்திப் பெயர்ந்து பந்தடிப்போம், தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே - தேவர்களது ஆரம் பூண்ட மார்பினை யுடையான் வாழ்கவென்று வாழ்த்திப் பந்தடிப்போம்;

கொடி இழிந்தென உலாய் என்க.