6. வாழ்த்துக் காதை



23

   ஊசல் வரி

வடங்கொள் மணியூசன் மேலிரீஇ ஐயை
யுடங்கொருவர் கைநிமிர்த்தாங் கொற்றைமே லூக்கக்
கடம்பு முதல்தடித்த காவலனைப் பாடிக்
குடங்கைநெடுங் கண்பிறழ ஆடாமோ வூசல்
கொடுவிற் பொறிபாடி ஆடாமோ வூசல்;



23
உரை
23

''வடங்கொண்மணி . . . ஊசல்''

        வடங்கொள் மணியூசல் மேல் இரீஇ ஐயை யுடங்கு ஒருவர் கை நிமிர்த்து ஆங்கு ஒற்றை மேல் ஊக்க - வடங்களைக் கொண்ட அழகிய ஊசல் மீதிருத்தி ஐயையுடன் நின்றாரிலொருவர் கையை நிமிர்த்து ஒற்றைத் தாளத்துடன் மேலே செலுத்த, கடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடிக் குடங்கை நெடுங்கண் பிறழ ஆடாமோ ஊசல் - கடம்பின் அடியை எறிந்த மன்னனைப் புகழ்ந்து பாடி அகங்கை போன்ற நெடிய கண்கள் பிறழா நிற்க ஊசல் ஆடுவோம், கொடுவிற் பொறிபாடி ஆடாமோ ஊசல் - வளைந்த வில்லின் இலச்சினையைப் பாடி ஊசல் ஆடுவோம்;

       
மணியூசல்-மாணிக்கம் பதித்த வூசலென்றுமாம். இரீஇ-இருந்து எனத் தன்வினையுமாம். ஐய வென்பது பாடமாயின் மெல்ல வென்றாகும். உடங்கு - உடன். ஒற்றை - ஏகதாளம். ஊக்க - நூக்க; தள்ள. விற்பொறி - இமயத்தில் வில்லிலச்சினையிட்டமை. ஆடுவாம் என்பது ஆடாம் என மருவிற்று; ஓகாரத்தை எதிர்மறையாக்கி இரண்டெதிர்மறை ஓருடன்பா டாயிற்று என்னலுமாம்.