6. வாழ்த்துக் காதை



24

ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ வூசல்
கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ வூசல்;



24
உரை
24

''ஓரைவர் . . . ஊசல்''

        ஓரைவர் ஈரைம்பதின்மர் உடன்று எழுந்த போரில் - ஐவரும் நூற்றுவரும் தம்முள் வெகுண்டு முற்பட்டுச் செய்த செருவில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடி - பெருஞ் சோறாகிய மிக்க உணவை வரையாது கொடுத்த சேரனது இயல்பினைப் புகழ்ந்து, கார்செய் குழல்ஆட ஆடாமோ ஊசல் - முகிலையொத்த கூந்தல் அலையும்படி ஊசல் ஆடுவோம், கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் - கடம்பு தடிந்தவாற்றினைப் புகழ்ந்து ஊசலாடுவோம்;
       

ஐவர் - பாண்டவர் ஐவர்; ஈரைம்பதின்மர் - கௌரவர் நூற்றுவர்; இவை தொகைக் குறிப்புச் சொற்கள். இருதிறச் சேனைக்கும் வரையாதளித்த வென்க. 1 ''அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்'' என்றார் பிறரும். சேரன், பொறையன், மலையன் என்பன சேரர் குடிப் பொதுப் பெயர்; ஒரு பொருள்மேல் வந்தன. செய், உவமவுருபு.


1 புறம். 1.